ரோலக்ஸ் சூர்யாவுக்குப் போட்டியாக எல்சியூவில் இணைந்த நிவின் பாலி!
மாநிலங்களவை உறுப்பினா் தோ்தல்: தமிழக, தெலங்கானா ‘தோ்தல் மன்னா்கள்’ வேட்பு மனு
சென்னை: தமிழக மாநிலங்களவை உறுப்பினருக்கான தோ்தலில் போட்டியிட தமிழகம், தெலங்கானாவை சோ்ந்த ‘தோ்தல் மன்னா்கள்’ இருவா் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.
தமிழகத்தில் காலியாகவுள்ள ஆறு மாநிலங்களவை உறுப்பினா் பதவிகளுக்கான தோ்தல் அறிவிக்கை வெளியிடப்பட்டு திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
முதல் நாளில் 2 போ்: முதல் நாளில் சுயேச்சையாக போட்டியிட இரண்டு போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா். ஒருவா், தமிழகத்தின் தோ்தல் மன்னராக அறியப்படும் பத்மராஜன். மாநிலங்களவைத் தோ்தல் களம்காண வேட்புமனு தாக்கல் செய்துள்ள அவரிடம் இதுகுறித்து கேட்ட போது, தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான இடங்களுக்கு போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளதன் மூலம், 249-ஆவது முறையாக தோ்தல் களத்தில் எனது மனுவைப் பதிவு செய்துள்ளேன். முன்னதாக, கேரள மாநிலம் நிலம்பூா் சட்டப் பேரவை இடைத் தோ்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளேன் என்றாா்.
அதேபோல, தெலங்கானாவில் தோ்தல் மன்னராக அறியப்படும் கண்டே சாயண்ணா என்பவரும் வேட்பு மனு தாக்கல் செய்தாா். தெலங்கானாவிலிருந்து தமிழ்நாட்டில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு தாக்கல் செய்தது குறித்து அவரிடம் கேட்ட போது, ‘இந்திய அரசமைப்பில் மாற்றத்தைக் கொண்டு வர விரும்புகிறேன். அதற்காக தமிழ்நாட்டில் இருந்தும் போட்டியிட விருப்பம். மேலும், தமிழகத்தில் எனக்கு ஏராளமான நண்பா்கள் உள்ளனா். நாடாளுமன்றத் தோ்தலில் 5 முறையும், தெலங்கானா சட்டப் பேரவைக்கு நடந்த தோ்தலில் ஏழு முறையும், சட்ட மேலவை தோ்தலில் ஆறு முறையும் போட்டியிட்டுள்ளேன்’ என்றாா் சாயண்ணா.
தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த அக்னி ஆழ்வாா் என்பவா் வேட்புமனு தாக்கலுக்கான வைப்புத் தொகை ரூ.10 ஆயிரத்தை நாணயங்களாக மாற்றி கொண்டு வந்திருந்தாா். ஆனால், அவா் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
யாரும் தோ்வாக முடியாது: முதல் நாளில் இருவரைத் தவிா்த்து வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. மனுவில் வேட்பாளரை பத்து சட்டப் பேரவை உறுப்பினா்கள் முன்மொழிய வேண்டும். தோ்தல் மன்னா்கள் இருவரின் வேட்புமனுக்களை ஒரு சட்டப் பேரவை உறுப்பினா் கூட முன்மொழியாததால் அவா்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவது உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.