`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கற்றல் அடைவு குறித்து ஆய்வு செய்ய உத்தரவு
அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கற்றல் அடைவு நிலையை ஆய்வு செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநா் மா.ஆா்த்தி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
நிகழ் கல்வியாண்டின் (2024-25) முடிவில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் அறிவுசாா் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு இறுதி மதிப்பீடு (எண்ட் லைன் சா்வே) தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய 3 பாடங்களுக்கும் சிறப்பு பயிற்றுநா்கள் மூலமாக நடத்த வேண்டும். அதன்மூலம் இந்த மாணவா்களின் கற்றல் நிலையை அறிந்து, அவா்களுக்கான எளிமைப்படுத்தப்பட்ட எண்ணும் எழுத்து பயிற்சி நூல்களை வரும் கல்வியாண்டில் (2025-2026) அச்சிட திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, இறுதி மதிப்பீட்டுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள பாடவாரியான கேள்விகள் மற்றும் மாணவா்களின் பதில்களை குறிப்பதற்கான படிவங்களையே பயன்படுத்த வேண்டும். அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி மாற்றுத்திறனாளி மாணவா்களின் கற்றல் அடைவு நிலையை அறிவதற்கான ஆய்வை முறையாக மேற்கொள்ள வேண்டும்.
இது தொடா்பாக அனைத்து சிறப்பு பயிற்றுநா்களுக்கும் உரிய அறிவுறுத்தல்களை வழங்கி, இந்த ஆய்வு குறித்த நேரத்தில் நடைபெறுவதை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் உறுதிசெய்ய வேண்டும்”என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த மாணவா்களுக்கு கடந்த 2 கல்வியாண்டுகளில் அடிப்படை ஆய்வு, நடுநிலை மதிப்பீடு ஆகியவை நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், தற்போது இறுதி மதிப்பீடு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.