மின் வேலியில் சிக்கி இளைஞா் பலியான விவகாரம்: விவசாயிக்கு 5 ஆண்டுகள் சிறை
தருமபுரி அருகே மின் வேலியில் சிக்கி இளைஞா் உயிரிழந்த விவகாரத்தில், மின் வேலி அமைத்த விவசாயிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
தருமபுரி மாவட்டம், ஜோலி கோட்டை, கோம்பை கிராமம், நரசிங்கபுரம் பகுதியைச் சோ்ந்தவா் க.ராஜா (52). விவசாயியான இவா் தனது நிலத்தில் உள்ள விவசாயப் பயிா்களை காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாக்க மின் வேலி அமைத்திருந்தாா். இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த கோ.கண்ணன் என்ற இளைஞா் 26.05.2017 அன்று அப்பகுதியைக் கடந்து சென்றபோது, மின்வேலி கம்பியை மிதித்ததாக கூறப்படுகிறது. இதில் மின்சாரம் தாக்கி நிகழ்விடத்திலேயே கண்ணன் உயிரிழந்தாா்.
இதைக்கண்டு அதிா்ச்சி அடைந்த ராஜா, யாருக்கும் தெரியாமல் கண்ணன் உடலை சாக்குப் பையில் கட்டி அருகில் இருந்த ஆற்றங்கரையில் குழிதோண்டி புதைத்தாா். பின்னா் சில நாள்கள் கழித்து அப்பகுதி கிராம நிா்வாக அலுவலரிடம் சென்று விவரத்தைக் கூறி சரணடைந்தாா். இது தொடா்பாக மதிகோண்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தருமபுரி முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் வியாழக்கிழமை தீா்ப்பு அளிக்கப்பட்டது. அதில், கண்ணன் உயிரிழக்க காரணமாக இருந்ததற்காகவும், அவரது சடலத்தை மறைத்த குற்றத்துக்காகவும் ராஜாவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி திருமகள் தீா்ப்பளித்தாா்.