பிரதமர் மோடியுடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உரையாடல்!
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்களுடன், அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உரையாடியுள்ளார்.
ஈரானின் முக்கிய ராணுவ தளவாடங்கள், அணுசக்தி கட்டமைப்புகள் மற்றும் ராணுவ அலுவலகங்கள் ஆகியவற்றை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஆபரேஷன் ரைசிங் லயன் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தாக்குதல்களில் ஈரானின் முப்படை தலைமைத் தளபதி உள்ளிட்ட முக்கிய ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இஸ்ரேலின் இந்தத் தாக்குதல்களுக்கு சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெறும் முயற்சியாக அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி, ஜெர்மனி பிரதமர் ஃப்ரைட்ரிச் மெர்ஸ் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் ஆகியோருடன் உரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அவர் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மெர் ஆகியோருடன் பேசவுள்ளார்.
இதுகுறித்து, வெளியான அறிக்கையில், ஈரானின் அச்சுறுத்தல்களுக்கு எதிரான இஸ்ரேலின் தற்காப்புத் தேவைகளை அந்தத் தலைவர்கள் அனைவரும் புரிந்துக்கொண்டனர் எனக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இருநாடுகளுக்கு இடையில் நிலவும் பதற்றமான சூழல்கள் கவலை அளிப்பதாகவும், அவற்றை தொடர்ந்து கவனித்து வருவதாகவும், இந்தியா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: கொடூர மரணங்களுக்கு முற்றுப்புள்ளி! ஈரானுக்கு டிரம்ப் மறைமுக எச்சரிக்கை!