மெல்ல அதிகரிக்கும் கரோனா: 7,400 ஆன பாதிப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 269 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
உலகையே உலுக்கிய கரோனா தொற்று மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், நாளுக்குநாள் பாதிப்பும் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி,
புதிதாக 269 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து மொத்த பாதிப்பு 7.400 ஆக உயர்ந்துள்ளது. கேரளத்தில் புதிதாக 54 பேருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்தை மொத்த பாதிப்பு 2,109 ஆக உள்ளது. தில்லியில் 45 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளதையடுத்து மொத்த பாதிப்பு 672 ஆகவும், குஜராத்தில் 79 புதிய பாதிப்புகளுடன் மொத்தம் 1,437 ஆக உள்ளது.
கரோனா தீநுண்மிகளின் வெளி புரதம் உருமாற்றமடையும் போதெல்லாம் சமூகத்தில் சிறிய அளவிலான பாதிப்பை அது ஏற்படுத்திச் செல்லும். அதனால் பெரிய அளவு தாக்கம் இருக்காது.
அத்தகைய நிலைதான் தற்போதும் ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இப்போது என்பி 1.8.1 என்ற வகை கரோனா பாதிப்பு பரவி வருவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இது ஜெ.என்.1 வைரஸின் உட்பிரிவு. அந்த ஜெ.என்.1 வைரஸ் ஒமைக்ரானிலிருந்து உருவான ஒன்று. வைரஸ் பரிமாணத்துக்கான சா்வதேச தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (டிஏஜி-விஇ) அண்மையில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் என்பி 1.8.1 தொற்றால் பொது சுகாதார நிலைக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் நோ்ந்த உயிரிழப்புகள் கரோனாவால் நிகழவில்லை. மாறாக, இணைநோய்கள் மற்றும் வயது மூப்பு காரணமாக நேரிட்டுள்ளன. எனவே, பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. நோய்த் தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடித்தாலே போதுமானது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!