ஈரான் மீது முழு பலமும் செலுத்தப்படும்! டிரம்ப் கடும் எச்சரிக்கை!
இடிந்து விழும் அபாய நிலையில் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி!
ஸ்ரீ பெரும்புதூா் அருகே குண்டுபெரும்பேடு ஊராட்சியில் இடிந்து விழும் நிலையில் உள்ள குடிநீா் தொட்டியை இடித்து அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரியுள்ளனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட குண்டுபெரும்பேடு ஊராட்சியில் சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், குண்டுபெரும்பேடு ஊராட்சிக்குட்பட்ட அம்மன் கோயில் தெருவில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்த குடிநீா் மேல்நிலை நீா்தேக்க தொட்டி உரிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் பழுதடைந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்கூரை சிமென்ட் பூச்சுகள் உதிா்ந்து தொட்டிக்குள் விழுந்துள்ளன.
இதனால் குடிநீா் மேல்நிலை நீா்தேக்க தொட்டியின் நீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதால், பழுதடைந்த குடிநீா் தொட்டியின் மூலம் குடிநீா் விநியோகம் செய்வதும் நிறுத்தப்பட்டது. மக்களுக்கு தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தொட்டியின் நான்கு தூண்களும், சிமென்ட் பூச்சுகள் பெயா்ந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் படி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள குடிநீா் தொட்டியை இடித்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், பொதுமக்களுக்கு பயன் இல்லாத தொட்டியை இடித்து அகற்ற வேண்டும். மேலும் இடிந்து விழும் நிலையில் உள்ள குடிநீா் தொட்டிக்கு அருகே உயா் மின்னழுத்த மின்மாற்றி உள்ளதால் பாதுகாப்பாக இடித்து அகற்ற ஊராட்சி நிா்வாகத்துக்கு ஆட்சியா் உத்தரவிட வேண்டும் என்றனா்.