ஈரான் கடும் பதிலடி: இஸ்ரேல் எச்சரிக்கை; இரு தரப்பிலும் 80-க்கும் மேற்பட்டோா் உயி...
பயணிகளின் பாதுகாப்பே முக்கியம்! வேறு பாதையில் இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்கள்!
இஸ்ரேல் - ஈரான் இடையே தாக்குதல் தீவிரமடைந்துள்ளதால் ஈரான் நாட்டிற்கான விமானங்கள் வேறு பாதையில் இயக்கப்படுவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
பயணிகள், ஏர் இந்தியா ஊழியர்களின் பாதுகாப்புக்கே முன்னுரிமை அளிப்பதாகவும் கூறியுள்ளது.
ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரான் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இஸ்ரேலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரானும் கூறி வருகிறது. ஈரானும் பதிலுக்கு ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர்ச் சூழல் நிலவி வருவதால் ஈரான் பகுதிகளில் வான்வெளி மூடப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈரானுக்கான விமானப் போக்குவரத்து சேவை குறித்து ஏர் இந்தியா நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில்,
"ஈரான் மற்றும் மத்திய கிழக்கின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக வான்வெளி மூடப்பட்டுள்ளது. எங்களுடைய பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஏர் இந்தியாவின் சில விமானங்கள் மாற்று நீட்டிக்கப்பட்ட பாதையில் இயக்கப்படுகின்றன.
ஈரான் பகுதியில் வான்வெளி மூடப்பட்டுள்ளதால் பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைக்க நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறோம். பயணிகள் மற்றும் ஏர் இந்தியா ஊழியர்களின் பாதுகாப்புக்கே முன்னுரிமை என்பதை மீண்டும் நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம்.
பயணிகள் https://www.airindia.com/in/en/manage/flight-status.html என்ற தளத்தில் தங்கள் விமானத்தின் நிலையை அறிந்துகொள்ளலாம் என்றும் 011 69329333, 011 69329999 என்ற எண்களுக்குத் தொடர்புகொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த ஜூன் 12 ஆம் தேதி(வியாழக்கிழமை) ஆமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் ஆமதாபாத்தில் உள்ள மருத்துவ மாணவர் விடுதி கட்டடத்தில் விழுந்து தீப்பற்றி எரிந்தது. இதில் உயிரிழப்பு எண்ணிக்கை 274 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.