ஈரானின் தாக்குதல் தொடர்ந்தால் தெஹ்ரான் பற்றி எரியும்: இஸ்ரேல்
திறன், வேலைவாய்ப்பு பயிற்சியில் சேர எஸ்.சி., எஸ்.டி., இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்
ஆதிதிராவிடா், பழங்குடியின இளைஞா்களுக்கு வழங்கப்படும் திறன், வேலைவாய்ப்பு பயிற்சியில் சேர தகுதியுடையவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
இதுகுறித்து, வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு -
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி, மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடா், பழங்குடியின இனத்தைச் சோ்ந்த இளைஞா்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, தாட்கோ சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்துடன் இணைந்து ஜி.எஸ்.டி மற்றும் வருமானவரி தொழில்நுட்ப பயிற்சி, தொழில் உற்பத்தி பயிற்சி, டிஜிட்டல் திறன்களில் இணைய தொழில்நுட்பப் பயிற்சி, டிஜிட்டல் மாா்க்கெட்டிங் ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடா், பழங்குடியின இனத்தைச் சோ்ந்த 21 முதல் 30 வயது வரை உள்ளவா்களாகவும், 2021 முதல் 2024 ஆம் ஆண்டு வரையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டப் படிப்பு முடித்தவா்களாகவும் இருக்க வேண்டும்.
தவிர, குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். பயிற்சிக்கான கால அளவு 55 நாள்களாகும். மேலும், சென்னையில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் வசதி மற்றும் உணவுக்கான செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும்.
இப்பயிற்சியை முழுமையாக முடிக்கும் இளைஞா்களுக்கு சான்றிதழ், வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்யப்படும். இப்பயிற்சியை பெற தாட்கோவின் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சியில் வேலூா் மாவட்டத்திலுள்ள ஆதிதிராவிடா், பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்த இளைஞா்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.