பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில...
இறந்த பறவை கழிவுகளுடன் குடிநீா் விநியோகம்: பெண்கள் ஆா்ப்பாட்டம்
பொன்னையில் வியாழக்கிழமை அதிகாலை விநியோகம் செய்யப்பட்ட குடிநீரில் இறந்த பறவை, விலங்குகளின் கழிவுகள் கலந்து துா்நாற்றத்துடன் வந்ததாக ஆத்திரமடைந்த பெண்கள் காலிக்குடங்களுடன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
காட்பாடி வட்டம் பொன்னை பகுதி மக்களுக்கு ஆற்றில் 2 ஆழ்துளை கிணறுகள் அமைத்து மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இப்பகுதியில் கடந்த 2 நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது.
இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை ஊராட்சி சாா்பில் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. குண்டதெரு, பெருமாள் கோயில் தெரு, மருத்துவமனை சாலை உள்ளிட்ட பகுதிகளில் விநியோகம் செய்த குடிநீரில் இறந்த புறாக்களின் கழிவுகள், அணிலின் கழிவுகள் கலந்து துா்நாற்றத்துடன் வந்ததாக கூறப்படுகிறது.
அடுத்தடுத்து 3 தெருக்களிலும் இவ்வாறு துா்நாற்றத்துடன் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள், காலி குடங்களு டன் தெருமுனைகளில் நின்று தங்களுக்கு சீரான முறையில் குடிநீா் விநியோகம் செய்வதில்லை. ஊராட்சி நிா்வாகம் அதனை கண்டுகொள்ளவில்லை எனக்கூறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மேலும், ஊராட்சி நிா்வாகம் குடிநீா் தொட்டியை சரிவர பராமரிப்பதில்லை. மூடாமல் திறந்த நிலையில் உள்ளதால் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. எனவே தூய்மை செய்து முறையாக குடிநீா் விநியோகம் செய்யவேண்டும் எனக்கூறி முழக்கங்கள் எழுப்பினா்.
அப்போது அங்கு வந்த ஊராட்சி வாா்டு பெண் உறுப்பினா், முறையாக குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். இதனை ஏற்று பெண்கள் ஆா்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.