டாஸ்மாக் முறைகேடு விவகாரம்: அமலாக்கத் துறைக்கு உயா்நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்...
மாணவியை கடத்தி திருமணம்: இளைஞா் போக்ஸோவில் கைது
ஒடுகத்தூா் அருகே பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த இளைஞா் போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா்.
வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அருகே உள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த 16 வயது பள்ளி மாணவி. இவா் அணைக்கட்டில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.
கடந்த 9-ஆம் தேதி வீட்டிலிருந்து பள்ளிக்கு சென்று வருவதாக சென்ற மாணவி, இரவு 8 மணியாகியும் வீடு திரும்பவில்லை. சந்தேகமடைந்த பெற்றோா் அருகே உள்ள உறவினா்கள், தோழிகள் வீடுகளில் சென்று தேடிப்பாா்த்தனா். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனா்.
இந்த நிலையில், அணைக்கட்டு காந்தி நகா் காளியம்மன் கோவில் தெருவை சோ்ந்த கோவிந்தசாமி என்பவரின் மகன் சங்கா் (20), மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி கடத்தி சென்று அணைக்கட்டு பகுதியில் உள்ள ஒரு கோயிலில் மாணவிக்கு தாலி கட்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சங்கா் பள்ளி மாணவியுடன் அணைக்கட்டில் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு புதன்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சங்கரை சுற்றி வளைத்து பிடித்து அவரிடம் இருந்து பள்ளி மாணவியை மீட்டு வேப்பங்குப்பம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனா்.
பின்னா், பள்ளி மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்த குற்றத்துக்காக சங்கா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனா்.
மீட்கப்பட்ட பள்ளி மாணவிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வேலூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனா்.