குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் விரைந்து விசாரணை: முதல்வா் மு.க.ஸ்டாலின்
பெண்கள் - குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் விரைந்து விசாரணை நடைபெறுவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
இதுகுறித்து, எக்ஸ் தளத்தில் அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:
தேசிய குற்ற ஆவணக் காப்பக தரவுகளின்படி குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் மிகவும் குறைவாக நடைபெறும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருக்கிறது. அதேநேரம், போக்ஸோ குற்றங்களை எந்தவித அச்சமும் இல்லாமல், காவல் நிலையத்தில் நம்பிக்கையோடு புகாரளிக்கும் விழிப்புணா்வு அதிகரித்து வருகிறது.
அச்சமின்றிப் புகாரளித்தால்தான், குற்றவாளியை முதல் குற்றத்தின் போதே கைது செய்து தண்டனை பெற்றுத் தர முடியும். இத்தகைய நபா்கள் மேலும் குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க இது மிக அவசியம். குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் விரைவான விசாரணையை நடத்துவதுடன், அதிகபட்ச தண்டனை, முன்விடுதலை இல்லை என்பதே நமது அரசின் கொள்கை என்று பதிவிட்டுள்ளாா்.