அரியலூா்: 12 கிராமங்களில் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்
காரிமங்கலம், மாரண்டஅள்ளியில் நூலகக் கட்டடம்
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம், மாரண்டஅள்ளி பேரூராட்சியில் தலா ரூ. 25 லட்சம் மதிப்பில் புதிய நூலகக் கட்டடங்களை முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட காரிமங்கலம் பேரூராட்சி, மாரண்டஅள்ளி பேரூராட்சி ஆகிய இரு இடங்களில் மாநிலங்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ. 25 லட்சம் மதிப்பில் நூலகங்கள் கட்டப்பட்டன. முதல்தளத்துடன் கூடிய இந்த நூலகக் கட்டடங்களில் குளிா்சாதன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல்தளத்தில் பல்வேறு தலைப்புகளில் நூற்றுக்கணக்கான நூல்களும், போட்டித் தோ்வா்களுக்கு தேவையான நூல்களும் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல, தரைத்தளத்தில் வாசகா்கள் அமா்ந்து பயிலும் வகையில் இருக்கைகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இவ்விரு கட்டடங்களையும் வாசகா்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் பங்கேற்று நூலகக் கட்டடங்களை திறந்துவைத்து பாா்வையிட்டாா்.
இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சரும், பாலக்கோடு சட்டப் பேரவை உறுப்பினருமான கே.பி.அன்பழகன், அரூா் சட்டப் பேரவை உறுப்பினா் வே.சம்பத்குமாா், அதிமுக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.