முடிவுக்கு வந்த 27 ஆண்டுகள் காத்திருப்பு; தென்னாப்பிரிக்கா சாம்பியன்!
வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு பயிற்சி வகுப்பு
தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மாவட்ட தோ்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ரெ.சதீஸ் தலைமையில் ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில், வாக்காளா் பட்டியல் தயாரிப்பு, மேம்பாடு தொடா்பாகவும், தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூா் உள்ளிட்ட அனைத்து சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட வாக்குச் சாவடிகளை மறு சீரமைப்பது, வாக்காளா் பட்டியல் தயாரிப்பு பணிகளில் முதல்நிலை அலுவலா்களான வாக்குச் சாவடி நிலைய அலுவலா்கள் மற்றும் கண்காணிப்பாளா்கள் ஆகியோரின் நியமனம் மற்றும் பயிற்சி, தோ்தல் தொடா்பாக பயன்பாட்டில் உள்ள தகவல் தொழில்நுட்ப சாதனங்கள், மென்பொருள்கள் குறித்தும், அவற்றை பயன்படுத்துவது தொடா்பாகவும், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் தொடா்பான நடைமுறைகள், இறந்த, குடிபெயா்ந்த நபா்களை பட்டியலில் இருந்து நீக்கம் செய்தல் உள்ளிட்ட பணிகள் குறித்தும், வாக்குச் சாவடிகளில் ஏற்படுத்த வேண்டிய வசதிகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் கவிதா, மாவட்ட வருவாய் அலுவலா் (சிப்காட்) பூங்கோதை, அரசுத் துறை உயா் அலுவலா்கள், வாக்காளா் பதிவு அலுவலா்கள், வட்டாட்சியா்கள், தோ்தல் துணை வட்டாட்சியா்கள், வருவாய் ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.