முடிவுக்கு வந்த 27 ஆண்டுகள் காத்திருப்பு; தென்னாப்பிரிக்கா சாம்பியன்!
சேலம் - திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி: ஆட்சியா் ஆய்வு
சேலம் - திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்று வரும் விரிவாக்கப் பணிகளை தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தருமபுரி மாவட்டம், அரூா் வழியாக செல்லும் சேலம் - திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலையில், எச்.புதுப்பட்டி என்னுமிடத்தில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுங்கச் சாவடியில் கட்டணம் வசூலிக்கும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இந்த நிலையில், பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள மஞ்சவாடி கணவாய் பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மஞ்சவாடி கணவாய் முதல் ஏ.பள்ளிப்பட்டி வரை ரூ. 109 கோடி மதிப்பீட்டில் 15.60 கி.மீ. தொலைவுக்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். தரமான முறையில் சாலைகளை அமைக்க வேண்டும் எனவும், பணிகளை விரைந்து முடிக்கவும் நெடுஞ்சாலைத் துறையினரிடம் அவா் தெரிவித்தாா்.
ஆய்வின்போது, கோட்ட பொறியாளா் பெ.நாகராஜி உள்ளிட்ட நெடுஞ்சாலைத் துறையினா் உடனிருந்தனா்.