முதல் 2 வாரங்களுக்கு மாணவர்கள் புத்தகங்கள் கொண்டுவரத் தேவையில்லை! - கேரள அரசு அறிவிப்பு
கேரளத்தில் வருகிற ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும்போது மாணவர்கள் முதல் 2 வாரங்களுக்கு பாடப் புத்தகங்கள் கொண்டுவரத் தேவையில்லை என அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.
பள்ளி மாணவ, மாணவியருக்கு தேர்வுகள் முடிந்து தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் ஜூன் முதல் வாரம் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
அந்தவகையில் கேரளத்தில் 2025-26 கல்வியாண்டுக்கு ஜூன் மாதம் பள்ளிகள் திறந்தபின், முதல் 2 வாரங்களுக்கு மாணவர்கள் பாடப் புத்தகங்கள் கொண்டுவரத் தேவையில்லை என்று கூறியுள்ளது.
அந்த 2 வாரங்களுக்கு மாணவர்களுக்கு சமூகப் பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் அதுதொடர்பான பாடங்களை ஆசிரியர்கள் கற்பிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள், சுகாதார பிரச்னைகள், சமூக ஊடகங்களின் பயன்பாடு, சட்ட விதிகள், குற்றச் செயல்கள், சுற்றுச்சூழல் ஆகியவை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு வகுப்புகள் எடுக்கப்பட உள்ளன.
இதற்காக காவல்துறை, குழந்தைகள் உரிமைகள் ஆணையம், தேசிய சுகாதார இயக்கம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைப்பைச் சேர்ந்தவர்கள் கல்வித் துறைக்கு இதுதொடர்பான வழிமுறைகளை வழங்கியுள்ளதாக கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்தார்.
நாட்டிலேயே முதல்முறையாக மாணவர்களுக்கு பள்ளியிலேயே விழிப்புணர்வு ஏற்படுத்த கேரள அரசு இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | அமெரிக்கா மீது வரியைக் குறைத்த இந்தியா? டிரம்ப்பின் பேச்சால் மீண்டும் குழப்பம்!