முதல் இன்னிங்ஸில் 669 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து; 2-வது இன்னிங்ஸில் இந்தியா திணறல்!
இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 669 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 358 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
இதனையடுத்து, முதல் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி 669 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
அந்த அணியில் ஜோ ரூட் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இருவரும் சதம் விளாசி அசத்தினர். ஜோ ரூட் 150 ரன்களும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 141 ரன்களும் எடுத்தனர். பென் டக்கெட் (94 ரன்கள்), ஸாக் கிராலி (84 ரன்கள்), ஆலி போப் (71 ரன்கள்) எடுத்தனர்.
இந்தியா தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜஸ்பிரித் பும்ரா மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், அன்ஷுல் கம்போஜ் மற்றும் முகமது சிராஜ் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இங்கிலாந்து அணி இந்தியாவைக் காட்டிலும் 311 ரன்கள் முன்னிலை பெற்றது.
இந்தியா தடுமாற்றம்
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 669 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணி 311 ரன்கள் பின் தங்கிய நிலையில் போட்டியின் நான்காம் நாளான இன்று (ஜூலை 26) அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
இந்திய அணிக்கு தொடக்கமே பேரதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 0 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளிக்க, அடுத்து களம் கண்ட தமிழக வீரர் சாய் சுதர்சனும் அவர் சந்தித்த முதல் பந்திலேயே 0 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
உணவு இடைவேளையின்போது, இந்திய அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு ரன்னுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான சூழலில் உள்ளது.
இதையும் படிக்க: பேட்டிங் செய்வது இன்று மிகவும் எளிதாகிவிட்டது; கெவின் பீட்டர்சன் கூறுவதன் காரணம் என்ன?
England were bowled out for 669 in the first innings of the fourth Test against India.