ராமநாதசுவாமி கோயிலில் உள்ளூர் மக்கள் போராட்டம்! 500-க்கும் மேற்பட்டோர் கைது!
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் வழிபாட்டு உரிமையை மீட்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் முக்கிய பிரமுகர்களும், உள்ளுர் மக்களும் தரிசனம் செய்ய தனி வழி உள்ளது. இந்த நிலையில், தற்போது புதிதாக கோயில் இணை ஆணையர் செல்லத்துரை பொறுப்பேற்றுள்ளார்.
இவர், உள்ளுர் மக்கள் தரிசனம் செய்ய பயன்படுத்தி வந்த வழித்தடத்தில் தரிசனத்துக்குச் செல்ல தடை விதித்ததுடன் கட்டண வழித்தடம் வழியாக தரிசனம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு உள்ளுர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அரசியல் கட்சிகள், சமூக அமைப்பினர் மற்றும் உள்ளுர் மக்கள் போராட்ட கோயில் முன்பு இன்று(ஜூன் 17) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்கள் நல பேரவை சார்பில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ளுர் மக்கள் தரிசனம் செய்ய பயன்படுத்திய வழித் தடத்தில் தரிசனம் செய்ய அனுமதிக்கக் கோரி மேற்கு கோபுர கோயில் வழியாக தடுப்புகளை தாண்டி போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
காவல் துறையினர் மூன்று இடங்களில் தடுப்புகள் அமைப்பு தடுப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால், போராட்டக்காரர்கள் தடுப்புகளை தள்ளிக் கொண்டு உள்ளே சென்றனர்.
மேலும், 3-வது தடுப்பு பகுதியில் காவல்துறையினருக்கும் போராட்ட காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால், போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
பொதுமக்கள் நடத்திய போராட்டத்தால் ராமநாத சுவாமி கோவிலைச் சுற்றி உள்ள பகுதிகளில் 3 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.