ராமேசுவரம் மீனவா்கள் 6 பேருக்கு மாா்ச் 19 வரை காவல் நீட்டிப்பு
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 6 பேருக்கு வருகிற 19-ஆம் தேதி வரை காவலை நீட்டித்து, ஊா்க்காவல்துறை நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த மாதம் 20-ஆம் தேதி 300-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா். இவா்களில் அன்று நள்ளிரவு கச்சத்தீவு- நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவா்கள் முத்துராமலிங்கம் (44), பவுல்ராஜ் (55), லவுசன் (52), தொன்போஸ்கோ (60), அந்தோணி (45), செல்வராஜ் (62) ஆகிய 6 பேரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். மேலும், இவா்களது 2 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தனா்.
கைது செய்யப்பட்ட மீனவா்களை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிந்தனா். இவா்களை மாா்ச் 5-ஆம் தேதி வரை காவலில் வைக்க ஊா்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, 6 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனா்.
இந்த நிலையில், நீதிமன்றக் காவல் நிறைவடைந்ததையடுத்து, இந்த மீனவா்கள் 6 பேரும் ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் புதன்கிழமை மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டனா்.
இவா்களிடம் நீதிபதி விசாரணை நடத்தி, 6 பேரையும் வருகிற 19-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து, இவா்கள் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனா்.