அடி மேல் அடி வாங்கும் RN Ravi... சீமானுக்கு செக்! | Elangovan Explains
ரூ.14.07 கோடியில் பிச்சாவரம் சுற்றுலா மையம் மேம்படுத்தும் பணி: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்
தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகம் சாா்பில் ரூ.14.07 கோடியில் பிச்சாவரம் சுற்றுலா மையம் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருவதாக வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் வட்டம், சொக்கன் ஓடை குறுக்கே ரூ.9 கோடியில் குச்சிப்பாளையம் ஒழுங்கியம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா்.
அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்து பேசியதாவது:
சிதம்பரத்தில் உள்ள சொக்கன் ஓடை வாய்க்காலின் மொத்த நீளம் 4,000 மீட்டா். இந்த வாய்க்கால் பாசன வாய்க்காலாகவும், கடைமடையில் வடிகாலாகவும் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் கிள்ளை, தில்லை விடங்கன், கீழச்சாவடி உள்ளிட்ட கிராமங்களில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. உப்பனாற்றின் கடை மடை பகுதியில் கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கடைமடை குச்சிப்பாளையம் ஒழுங்கியமானது தற்போது, இடிந்து விழும் நிலையில் உள்ளதால் உப்பு நீா் உள்புகுந்து விளை நிலங்கள் பாதிப்படைகின்றன. எனவே, சொக்கன் ஓடை குறுக்கே குச்சிப்பாளையம் ஒழுங்கியம் அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் 1,450 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், உப்புநீா் உள்புகுதல் தடுக்கப்படும். நிலத்தடிநீா் மேம்பட்டு சுமாா் 5,300 மக்களுக்கு குடிநீா் வசதி கிடைக்கும்.
தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின் சாா்பில் ரூ.14.07 கோடியில் பிச்சாவரம் சுற்றுலா மையம் மேம்படுத்தும் பணி, சிதம்பரம் ரயில்வே பீடா் சாலையில் ரூ.10 கோடியில் புதிய தங்கும் விடுதி என மொத்தம் ரூ.24.07 கோடியில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. கடலூா் மாவட்டத்தில் வரும் பிப்.21, 22-ஆம் தேதிகளில் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைக்கப்பட உள்ளது என்றாா்.
விழாவில், சிதம்பரம் உதவி ஆட்சியா் சீ.கிஷன்குமாா், நீா்வளத்துறை செயற்பொறியாளா்கள் காந்தரூபன், அருணகிரி, உதவி செயற்பொறியாளா் ரமேஷ், கிள்ளை பேரூராட்சி தலைவா் மல்லிகா ஆகியோா் பங்கேற்றனா்.