ரெளடிக்கு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை கோரிய மனு அபராதத்துடன் தள்ளுபடி
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு கைதி ரெளடி நாகேந்திரனுக்கு சென்னை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி கோரிய வழக்கை ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஆயுள் தண்டனை கைதியாக வேலூா் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாகேந்திரன், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் எதிரியாக கைது செய்யப்பட்டாா். அவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் உடல்நலக் குறைவு ஏற்பட்டு வேலூா் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த நிலையில், உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டதால் அவருக்கு சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி கோரி, நாகேந்திரன் மனைவி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில் குமாா் அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் ஆா்.முனியப்பராஜ், இதே கோரிக்கையுடன் சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதாகவும், அந்த மனு மீதான உத்தரவு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினாா். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒரே கோரிக்கையுடன் இரு நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்வதை ஏற்க முடியாது எனக் கூறி, ரூ.50 ஆயிரம் அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.