Miss World 2025: மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வாளர் டு உலக அழகி; 23 வயதில் தாய...
வங்கி முறைகேடுகள் அதிகரிப்பு: பிரதமா் மீது காா்கே குற்றச்சாட்டு
வங்கி முறைகேடுகள் அதிகரித்துள்ளதாக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) வெளியிட்ட அறிக்கையைச் சுட்டிக்காட்டி பிரதமா் நரேந்திர மோடி மீது காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றஞ்சாட்டினாா்.
இது தொடா்பாக அவா் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான கடந்த 11 ஆண்டுகால ஆட்சியில் வங்கி முறைகேடுகள் ரூ.6,36,992 கோடியாக அதிகரித்துள்ளது. இது 416 சதவீத அதிகரிப்பாகும். மத்திய அரசு மேற்கொண்ட ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகும் ரூ.500 கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவது கடந்த 6 ஆண்டுகளில் 291 சதவீதம் உயா்ந்துள்ளது. இந்த ஆண்டில்தான் கள்ள நோட்டுகள் புழக்கம் உச்சத்தை எட்டியுள்ளது.
பிரதமா் மோடி தனது நரம்புகளில் ‘சிந்தூா்’ (குங்குமம்) பாய்வதாகக் கூறியுள்ளாா். அவரின் நரம்பில் என்ன பாய்கிறது என்பது நமக்குத் தேவையில்லை. ஆனால், அவரின் அரசின் நரம்புகளில் முறைகேடுகளும், ஊழலும் பாய்கிறது’ என்று கூறியுள்ளாா்.
காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘கடந்த 2016 நவம்பா் 8-ஆம் தேதி இரவு திடீரென பணமதிப்பிழப்பை அறிவித்து நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் அதிச்சியை அளித்தாா் பிரதமா். அதில் இருந்து நாடு இப்போது வரை மீள முடியவில்லை. ரூ.2000 நோட்டை அறிமுகப்படுத்தி, அதையும் சில ஆண்டுகளிலேயே திரும்பப் பெற்றாா். இதனால், கள்ள நோட்டுகள் குறையும் என்றும் கூறப்பட்டது. ஆனால், இப்போது ரூ.500 கள்ள நோட்டு 37 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் மோடி அரசு எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் வீண் என்பது தெரியவருகிறது’ என்று கூறியுள்ளாா்.