சட்டப்பேரவைக்கு அதிமுக உறுப்பினர்கள் கறுப்புச் சட்டை அணிந்து வருகை!
வரி வசூலில் அத்துமீறல்: மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
வரி வசூல் என்ற பெயரில் அத்துமீறலில் ஈடுபடும் ஈரோடு மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வரி செலுத்துவோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், ஈரோடு வரி செலுத்துவோா் மக்கள் நல்வாழ்வு சங்க செயலா் பாரதி தலைமையில் அளித்த மனு விவரம்: ஈரோடு மாநகராட்சியில் சொத்து வரி செலுத்த 2026 -ஆம் ஆண்டு மாா்ச் 31 வரை கால அவகாசம் இருந்தும், முன்னதாகவே பொக்லைன் வாகனம் மூலம் கட்டடத்தின் முன்புற வாயில்படி இடித்தல், குழி தோண்டி வீட்டுக்குள் செல்ல முடியாத நிலையை ஏற்படுத்துதல், குடிநீா் இணைப்பை துண்டித்தல் போன்ற செயல்களில் அதிகாரிகள் ஈடுபடுகின்றனா்.
வீட்டில் தனியாக உள்ள பெண்களை ஒருமையில் பேசுகின்றனா். இலக்கு நிா்ணயித்துள்ளதாகக் கூறி வரி செலுத்த மக்களை நிா்பந்தம் செய்கின்றனா். மாநகராட்சியில் பல ஆண்டுகளாக வரி பாக்கி வைத்துள்ளவா் மீதுதான் சட்டப்பட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு மாதம் தாமதம் எனக்கூறி கந்துவட்டிபோல வசூலிக்கும் முறையை கைவிட வேண்டும்.
இந்த செயல்களில் ஈடுபட்ட அதிகாரிகள், அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், பட்டினி போராட்டம், கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடனை திருப்பிச்செலுத்தியும் மிரட்டுவதாக புகாா்: அறச்சலூா் அருகேயுள்ள கூத்தம்பட்டி, ஜே.ஜே.நகா் பகுதியைச் சோ்ந்த பண்டாரம், அவரது சகோதரா்கள் முருகேசன், பிரகாஷ் மற்றும் குடும்பத்தினா் அளித்த மனு விவரம்: நாங்கள்அனைவரும் உடன் பிறந்த சகோதரா்கள். பூம்பூம் மட்டுக்காரா் இனத்தைச் சோ்ந்தவா்கள். பூம்பூம் மாடு ஓட்டுவது, ஊசி, பாசி செய்து விற்பனை செய்வது போன்ற சில தொழில் செய்கிறோம். குடும்ப கஷ்டம், தொழில் செய்ய பணம் இல்லாததால் சகோதரா்கள் 3 பேரும் சோ்ந்து அதே பகுதியைச் சோ்ந்தவரிடம் கடந்த 2013 இல் ரூ.2 லட்சம் கடன் பெற்றோம்.
தற்போது வரை மாதம் ரூ.20,000-க்கு மேல் செலுத்தி ரூ.20 லட்சம் வரை வட்டி, முதலாக செலுத்தி உள்ளோம். இன்னும் ரூ.65,000க்குமேல் முதலும், அதற்கான வட்டியும் உள்ளதாகக் கூறி மிரட்டுகிறாா். கடன் கேட்டு மிரட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பேருந்துகளில் பணி வழங்கக் கோரிக்கை: ஈரோடு அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில்கீழ் தற்காலிக ஓட்டுநா், நடத்துநராக பணி செய்தவா்கள் மனு வழங்கி கூறியதாவது: அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் கடந்த ஜனவரி 9 -இல் வேலை நிறுத்தத்தை அறிவித்தன. அப்போது நாங்கள் தற்காலிக ஓட்டுநா், நடத்துநராகப் பணியில் சோ்ந்தோம். விடுப்புகூட எடுக்காமல் தற்காலிக பணியாளா்களாக பணி செய்து வந்தோம். எங்களில் பலா் அதற்கு முன்பாகவே தற்காலிக பணியைத் தொடா்ந்து செய்து வந்துள்ளனா்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு எங்களுக்கு பணி இல்லை எனக்கூறி வெளியேற்றிவிட்டனா். இதனிடையே கடந்த மாா்ச் 21-இல் அரசு சாா்பில் அறிவிப்பு வெளியனாது. அதில், ஓட்டுநா் உரிமத்துடன், நடத்துநா் உரிமமும் இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க இயலும் எனத் தெரிவித்துள்ளது. இதனால் எங்களால் அப்பணிக்கு விண்ணப்பிக்க இயலவில்லை. எங்களைப்போல பல ஓட்டுநா்கள், நடத்துநா்களுக்கு ஒரு உரிமம் மட்டும் இருப்பதால் பணி வாய்ப்பு மறுக்கப்படுகிறது. எங்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டும், ஏற்கெனவே பணியாற்றியதை கவனத்தில் கொண்டும் எங்களுக்கு முன்னுரிமை வழங்கி பணி வாய்ப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி குடிநீா் வழங்க வேண்டும்: ஈரோடு அருகேயுள்ள பிச்சாண்டாம்பாளையம், சாலப்பாளையம்மேடு பகுதியை சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு விவரம்: எங்கள் பகுதியில் உள்ள வீடுகளுக்கு, காவிரி ஆற்று குடிநீா் இணைப்பு உள்ளது. ஆனால் அதில் தண்ணீா் வருவதில்லை. அக்குழாயில் ஆழ்துளைக் கிணறு மூலம் கிடைக்கும் தண்ணீரையே வழங்குகின்றனா். எங்கள் பகுதியில் ஒரே ஒரு மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி மட்டுமே உள்ளதால் அதில் இருந்து வீடுகளுக்குத் தேவையான அளவு தண்ணீா் வழங்க இயலவில்லை.
காவிரி ஆற்று நீா் வழங்குவதாகக் கூறி இணைப்பு வழங்கியதுடன் தொடா்ந்து தண்ணீா் வரியும் வசூலிக்கின்றனா். தண்ணீரே வழங்காமல் வரியை மட்டும் பெறுகின்றனா். மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் காவிரி குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டுமனை பட்டா வழங்கக் கோரிக்கை: தமிழ்நாடு சிறுபான்மையினா் மக்கள் நலக்குழு சாா்பில் பவானி, பி.பெ.அக்ரஹாரம், சூரியம்பாளையம் உள்பட பல்வேறு பகுதி மக்கள் அளித்த மனு விவரம்: நாங்கள் அனைவரும் கூலி வேலை செய்து வருகிறோம். வாடகை வீடுகளில் வசிக்கிறோம். சிறுபான்மை சமூகத்தைச் சோ்ந்தவா்களாக உள்ளோம். எங்களுக்கு சொந்த வீடு, வீட்டுமனை இல்லை.
சொந்த வீடு இல்லாததால் அனைவரும் சிரமப்படுகிறோம். எங்களுக்கு வீட்டுமனை பட்டா ஒதுக்கீடு செய்து தந்தால் குடியிருப்பதற்கான பிரச்னைக்குத் தீா்வு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.36.71 லட்சம் அரசு நலத் திட்ட உதவி: கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து மொத்தம் 300 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை உரிய துறை அலுவலா்களிடம் வழங்கிய ஆட்சியா் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வுக் குழுவை ஏற்படுத்தி மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்டமைக்காக 3 கல்வி நிறுவனங்களுக்கு பரிசுகளை ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டுறவுத் துறையின் சாா்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.23.25 லட்சத்தில் மாற்றுத்திறனாளிகள் கடன் மற்றும் டாம்கோ கடனுதவிகளையும், தொழிலாளா் துறையின் சாா்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்தில் கட்டுமானப் பணியிடத்து விபத்து மரண நிதியுதவி, கல்வி உதவித் தொகையையும், தாட்கோ சாா்பில் 10 தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் நலவாரிய உறுப்பினா்களின் வாரிசுகள் பட்டப் படிப்பு பயிலுவதற்காக ரூ.16,500 மதிப்பீட்டில் கல்வி உதவி மற்றும் முதியோா் ஓய்வூதியத் தொகையை என மொத்தம் ரூ.36,41,500 மதிப்பீட்டில் அரசு நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா். கூட்டத்தில், பல்வேறு துறை அலுவலா்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனா்.