வருவாய்த்துறை அதிகாரியை மிரட்டிய வழக்கு; காங்கிரஸ் எம்.எல்.ஏ-வுக்கு சிறைத் தண்டனை விதித்த கோர்ட்!
கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ-வாக இருப்பவர் ராஜேஷ்குமார். இவர் காங்கிரஸ் இளைஞராணி மாவட்ட தலைவர், காங்கிரஸ் மாவட்ட தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துவந்தார். கருங்கல் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்குமார், கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கிள்ளியூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். கடந்த 2021 சட்டசபை தேர்தலில் கிள்ளியூர் தொகுதியில் இருந்து 2-வது முறையாக எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவராக இருந்தபோது பொது மக்கள் கோரிக்கைகளுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தினார். கருங்கல் அருகே உள்ள மிடாலம் பகுதியில் நத்தம் புறம்போக்கு நிலத்தில் உள்ள வீடுகளை வருவாய்த்துறை அதிகாரிகள் 2013-ம் ஆண்டு பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர். அதற்கு அன்றைய இளைஞர் காங்கிரஸ் தலைவரான ராஜேஷ்குமார் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் மிடாலம் பகுதிக்கு நேரில் சென்று வீடுகளை அகற்றுவதை தடுக்க முயன்றுள்ளார். இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரை விசாரித்த போலீஸார், வருவாய்த்துறை அதிகாரிகளை மிரட்டியதாக வழக்குப்பதிவு செய்தனர். மேலும் குற்றபத்திரிகையும் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நாகர்கோவில் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் நாகர்கோவில் முதன்மை சார்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், வருவாய்த்துறை அதிகாரிகளை மிரட்டிய ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ மற்றும் மிடாலம் பகுதியைச் சேர்ந்த ஆமோஸ், சுபிதா ஆகியோருக்கு 3 மாதங்கள் சிறைத் தண்டனை மற்றும் தலா 100 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கில் மேல்முறையீடு செய்துள்ளதாக ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ தரப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ தரப்பில் கூறுகையில், "கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி,மிடாலம் ஊராட்சிக்குட்பட்ட, மிடாலம் 'பி' வில்லேஜ், பிச்சவிளை என்னும் பகுதியில் களம் புறம்போக்கு பகுதியில் ஏழை குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக வசித்து வந்தனர்.

அவர்கள் ஏற்கனவே கர தீர்வை, வீட்டுவரி, குடிநீர் கட்டணம், மின் கட்டணம் செலுத்தி வந்தனர்.2013 -ம் ஆண்டு அந்த ஏழை குடும்பங்களுக்கு எந்த வித முன்னறிவிப்பும் இன்றி வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளும் இணைந்து ஜேசிபி வைத்து வீடுகளை இடிக்க அரசு அதிகாரிகள் வந்தனர். மனிதாபிமானமற்ற அரசு அதிகாரிகளின் செயலை கண்டித்து மக்களுடன் சேர்ந்து போராடிய போது காவல்துறையால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தான் இந்த வழக்கில் உண்மை நிலை" என்றனர்.