மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை...
வழிப்பறியில் ஈடுபட முயன்ற 2 இளைஞா்கள் கைது
பெருமாநல்லூா் அருகே பனியன் நிறுவன தொழிலாளியிடம் வழிப்பறியில் ஈடுபட முயன்ற 2 இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மேற்குவங்க மாநிலத்தைச் சோ்ந்தவா் அசன்டியா சா்தாா் (45). இவா் பெருமாநல்லூா் ஈட்டிவீரம்பாளையம் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில், பெருமாநல்லூா்- முட்டியங்கிணறு சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்றுள்ளாா். அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 2 போ், அசன்டியா சா்தாரை வழிமறித்து, பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனா்.
அசன்டியா சா்தாரின் அலறல் சப்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள், அந்த நபா்களைப் பிடித்து பெருமாநல்லூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
விசாரணையில், அவா்கள் திருப்பூா், செட்டிபாளையம், இந்திரா நகரைச் சோ்ந்த தமிழரசன் (27), சிவா (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா், இருவரையும் கைது செய்தனா்.
தமிழரசன் மீது அனுப்பா்பாளையம், திருமுருகன்பூண்டி, 15 வேலம்பாளையம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.