வாணியம்பாடி: சாலை தடுப்பு மீது மோதி விபத்து! தலைமைக் காவலர் பலி!
வாணியம்பாடி: வாணியம்பாடியில் இருசக்கர வாகனம் சாலையின் தடுப்பு மீது மோதி விபத்தில் ஆம்பூர் நகர காவல் நிலைய தலைமைக் காவலர் பலியானார்.
திருப்பத்தூர் மாவட்டம், புதூர்நாடு மலை கிராமத்தைச் சேர்ந்தவர் காளிதாஸ். இவர் நாட்டறம்பள்ளி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
இவர் ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் வியாழக்கிழமை இரவு வழக்கம்போல, பணியை முடித்துவிட்டு நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டு இருந்தார்.
அப்போது, வாணியம்பாடி புதூர் பகுதி சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக சாலையில் உள்ள தடுப்பு வேலி மீது வேகமாக மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் தலை மற்றும் முகம், தாடை உள்ளிட்ட பகுதிகளில் படுகாயம் அடைந்து அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நகர காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா, வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் உள்ளிட்ட காவல்துறையினர் தடயங்களைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.