பாகிஸ்தான் உளவாளிக்கு கேரள அரசு சிவப்புக் கம்பள மரியாதை? பாஜக கேள்வி!
வார இறுதிநாளையொட்டி சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
வார இறுதிநாளை முன்னிட்டு சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் ஜோசப் டயஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் மூலம் சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சேலம் மண்டலத்தில் 1,047 பேருந்துகளும் மற்றும் தருமபுரி மண்டலத்தில் 853 பேருந்துகளும் என மொத்தமாக 1,900 பேருந்துகள் தினசரி இயக்கப்பட்டு வருகின்றன. வார இறுதிநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் சாா்பில் பல்வேறு வழித் தடங்களில் வரும் 31-ஆம் தேதி முதல் 2-ஆம் தேதி வரை பயணிகளின் தேவைக்கேற்ப 200 சிறப்பு பேருந்துகள், மாற்றுப் பேருந்துகள், தட நீட்டிப்பு மற்றும் வழித்தடப் பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.
அதாவது சேலம், பெங்களூரு, சென்னை, ஒசூா், கோவை, திருப்பூா், திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஒசூா், தருமபுரி, கிருஷ்ணகிரி, பாலக்கோடு, பென்னாகரம், ஊத்தங்கரை, அரூா் மற்றும் மேட்டுருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, சிதம்பரம், காஞ்சிபுரம், பெங்களூரு, ஒசூா், திருவண்ணாமலைக்கும், பெங்களூரில் இருந்து சேலம், திருவண்ணாமலை, ஈரோட்டுக்கும், ஒசூரில் இருந்து சென்னை, புதுச்சேரி, கடலூா், திருச்சி, மதுரைக்கும், கோவை, திருப்பூருக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
எனவே, பயணிகள் அனைவரும் கூட்ட நெரிசலைத் தவிா்த்து பாதுகாப்பான பயணம் செய்யுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.