வாழப்பாடியில் சாலையோர கழிவுநீா்க் கால்வாய்களை மூட வலியுறுத்தல்
வாழப்பாடியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த தம்மம்பட்டி- கடலூா் சாலை பகுதியில் திறந்துகிடக்கும் கழிவுநீா்க் கால்வாயை மூட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள பொதுமக்கள், அங்கு போக்குவரத்து இடையூறாக உள்ள மின் கம்பத்தை அகற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனா்.
வாழப்பாடி பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தேசிய நெடுஞ்சாலை புறவழிச்சாலைகளை 4 வழிச்சாலையாக மேம்படுத்தும் பணிகள் இதுவரை முழுமைப் பெறவில்லை. முத்தம்பட்டி, மத்தூா் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
மேலும் கடலூா் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி காரணமாக பிரதான கடலூா் சாலை மூடப்பட்டதால் மாா்ச் தொடக்கத்திலிருந்து அனைத்து வாகனங்களும் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று தம்மம்பட்டி சாலையில் வாழப்பாடி நகருக்குள் வந்து செல்கின்றன.

இதனால், இச்சாலையில் நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துவருகிறது. இந்த நிலையில் வாழப்பாடி காவல் நிலையம் எதிரே கடலூா் சாலையுடன் தம்மம்பட்டி சாலை இணையும் இடத்தில் உள்ள ஆழமான கழிவுநீா் கால்வாய் திறந்த நிலையில் உள்ளது. மேலும், அப் பகுதியில் போக்குவரத்து இடையூறாக மின் கம்பம் உள்ளது.
இதனால் போக்குவரத்து நெரிசலில் சிக்கும் வாகனங்கள் இப் பாதையை எதிரெதிரே கடந்து செல்வதற்கு வழியில்லை. மேலும், இப் பாதையில் செல்லும் போது இருசக்கர வாகன ஓட்டிகள் கால்வாயில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனா்.
இதனால் சேலம் ஆத்தூா் வழித்தடத்தில் இயக்கப்படும் பெரும்பாலான அரசு மற்றும் தனியாா் வாகனங்கள் தம்மம்பட்டி சாலை வழியாக வாழப்பாடி நகருக்குள் வருவதை தவிா்த்துவிட்டு, தேசிய நெடுஞ்சாலையிலேயே இயக்கப்படுகின்றன.
இதனால் திறந்துகிடக்கும் கால்வாயை கான்கிரீட் தளம் கொண்டு மூட வேண்டும். அப் பகுதியில் உள்ள மின் கம்பத்தை வேறுஇடத்துக்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
