`விஜய்யைப் பார்த்துட்டு வரேன்னு சொன்னா இப்படி வருவானு நினைச்சுக்கூட பார்க்கல' - கதறும் உறவினர்கள்
கரூரில் விஜய் கலந்துகொண்ட தவெக கட்சிக் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பரிதாபமாக உயிரிழந்துள்ளது நாடு முழுக்க பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதில், திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும், இளைஞர் ஒருவரும் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்த கோகுலப்ரியா (29). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. கரூரில் நடைபெற்ற தவெக கூட்டத்துக்கு கோகுலப்ரியா, அவரின் கணவர் ஜெயபிரகாஷ், குழந்தை அதே ஊரைச் சேர்ந்த சிலர் சென்றுள்ளனர். மாலை ஆக ஆக அதிகமாக கூட்டம் கூடியதால், நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், கணவர் ஜெயபிரகாஷ் குழந்தையை அழைத்துக் கொண்டு கூட்டத்திலிருந்து வெளியேறி உள்ளார். மனைவி கோகுலப்ரியாவையும் தன்னுடன் வருமாறு ஜெயபிரகாஷ் அழைத்துள்ளார். ஆனால், விஜய்யைப் பார்த்துவிட்டு வருவதாகக் கூறி, தன்னுடன் வந்தவர்களுடன் வருவதாக கூறி அங்கேயே நின்று உள்ளார். ஜெயபிரகாஷ் குழந்தையுடன் வெளியேறிய சிறிது நேரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நெரிசலில் சிக்கி கோகுலப்ரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஜெயபிரகாஷ் குழந்தையுடன் வெளியேறியதால் உயிர்தப்பியுள்ளனர்.

விஜய்யை பார்த்துவிட்டு வரேன்னு சொன்னா, இப்படி சடலமா வருவானு நினைச்சுக்கூட பார்க்கவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர் கோகுலப்ரியாவின் உறவினர்கள். கோகுலப்ரியாவின் உடல் வெள்ளக்கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது. வெள்ளகோவிலில் செல்போன் கடை வைத்துள்ளவர் மணிகண்டன். இவருக்குத் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். விஜயின் தீவிர ரசிகரான இவர் தவெக-வில் உறுப்பினராகவும் உள்ளார். கட்சி ஆரம்பித்தது முதல் தொடர்ந்து கட்சிப் பணியாற்றி வந்துள்ளார். நேற்று தனது நண்பர்களுடன் விஜயை பார்ப்பதற்காக கரூர் சென்றுள்ளார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலியாகி உள்ளார். வெள்ளக்கோவில் பகுதியில் இளம்பெண் ஒருவரும், இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.