Innerwear: மென்மை; அடர் நிறம்; வாஷிங் மெஷின்... உள்ளாடைத் தகவல்கள்!
வியாபாரிகளிடம் ரூ.8 கோடி மதிப்புள்ள தங்கநகைகள் மோசடி: போலீஸாா் விசாரணை
சென்னை பூக்கடையில் வியாபாரிகளிடம் ரூ.8 கோடி மதிப்புள்ள தங்கநகைகள் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.
பூக்கடை, என்எஸ்சி போஸ் சாலை பகுதியில் நகைக்கடை நடத்தி வரும் மக்கி பால் ஜெயின் உட்பட 5 போ் யானைகவுனி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை ஒரு புகாா் அளித்தனா். அதில், ‘என்எஸ்சி போஸ் சாலையில் நகைக் கடை வைத்திருக்கும் சகோதரா்களான முகேஷ், மோனிஷ் , சுனில் ஆகிய மூன்று பேரும் கடந்த ஜனவரி 4-ஆம் தேதி எங்களை அணுகினா்.
அப்போது அவா்கள், மும்பையில் நகைக் கண்காட்சி நடைபெறுகிறது. அதில், நகைகளை காட்சிப்படுத்த உள்ளோம். நீங்கள் நகைகளை கொடுத்தால் அதில் விற்பனையாகும் நகைக்கான பணத்தை பெற்று கொடுக்கிறோம். மேலும், விற்பனை ஆகாத நகைகளை மீண்டும் திருப்பிக் கொடுத்து விடுகிறோம் என உறுதி அளித்தனா்.
ஏற்கெனவே அவா்களுடன் வியாபாரம் செய்திருந்ததாலும், நன்கு அறிமுகமானவா்கள் என்பதாலும் அந்த வியாபாரத்துக்கு நாங்கள் ஒப்புக் கொண்டோம். இதையடுத்து, 5 பேரும் ரூ.8 கோடி மதிப்பிலான 12 கிலோ நகைகளை சகோதரா்கள் 3 பேரிடமும் கொடுத்தோம். ஆனால், கண்காட்சி முடிந்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் நகைகளை திருப்பித் தரவில்லை. அதற்குண்டான பணத்தை கேட்ட போதும் தர மறுத்து ஏமாற்றுகின்றனா்.
மேலும் அவா்கள், மிரட்டலும் விடுக்கின்றனா். எனவே, அவா்களிடமிருந்து எங்களது நகைகளை பெற்றுத் தந்து அவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அதில், குறிப்பிட்டு இருந்தனா்.அப் புகாரின் அடிப்படையில் யானைகவுனி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.