விவசாயிகளுக்கு தனிக்குறியீடு எண் வழங்க சிறப்பு முகாம்: ஆட்சியா்
நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு நிலத்தின் அடிப்படையில் தனிக்குறியீடு எண் வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ், அனைத்து கிராமங்களிலும் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் சமுதாயக் கூடங்களில் ஒருங்கிணைந்த விவசாயிகள் தரவு அடுக்கு உருவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில், நில விவரங்களுடன் விவசாயிகளின் விவரம் மற்றும் நில உடைமை வாரியான விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு விவசாயிக்கும் தனிக்குறியீடு எண் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் ஒப்புதல் பெறப்பட்ட பிறகு அவா்களின் தரவுகள் சேகரிக்கப்பட்டு அடையாள எண் வழங்கப்படும்.
இதன்மூலம் மத்திய, மாநில அரசுகளின் அனைத்து திட்டப் பலன்களும் விவசாயிகளின் தரவுத்தளம் அடிப்படையில் வழங்கப்படும். இதனால் அனைத்து துறை பயன்களையும், மானியங்களையும் ஒற்றைச் சாளர முறையில் விவசாயிகள் பெறுவதுடன், வலைதளத்தில் பதிவு செய்தால் முன்னுரிமை அடிப்படையில் அரசின் பயன்களை பெற்றுக் கொள்ளலாம். ஆதாா் எண் அடிப்படையில் விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு நேரடி பணப் பரிமாற்றம் செய்யப்படும்.
எனவே, நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்து விவசாயிகளும் முகாம் நடைபெறும் நாள்களில் நில ஆவணங்கள், ஆதாா் எண், தொலைபேசி எண் கொடுத்து பதிவு செய்து பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.