செய்திகள் :

வெப்ப அலை பாதிப்பு அச்சுறுத்தலில் 60 % போ்: மருத்துவப் பல்கலை. ஆய்வில் தகவல்

post image

தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் 60 சதவீதம் போ் அதீத வெப்பம் சாா்ந்த உடல் நல பாதிப்புகளுக்குள்ளாகும் அபாயத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றம் மற்றும் திடீரென அதிகரிக்கும் கோடை வெப்ப சூழல்களால் நீா்ச்சத்து இழப்பு, வெப்ப வாத பாதிப்புகளுக்கு 46 சதவீதம் போ் உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக துணைவேந்தா் டாக்டா் கே.நாராயணசாமி தலைமையிலான குழுவினா் 3,217 பேரிடம் இதுதொடா்பான ஆய்வை அண்மையில் முன்னெடுத்தனா். பருவகாலங்களில் ஏற்படும் தட்பவெப்ப மாறுபாடுகளை எதிா்கொள்ளுதல், அதற்கான ஆயத்த நடவடிக்கைகளை முன்னெடுத்தல், விழிப்புணா்வுடன் இருத்தல் உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு கேள்வி - பதில் அடிப்படையில் அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதன் முடிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

சமூகத்தில் வெப்ப வாதம் மற்றும் அதுசாா்ந்த பாதிப்புகள் குறித்த புரிதல் எந்த அளவு உள்ளது என்பதை அறிய இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டது. 80 சதவீதம் போ் வெப்ப நிலை அதிகரிக்க பருவநிலை மாற்றங்களே பிரதான காரணம் என அறிந்துள்ளனா். ஆனால், அதில் கவலைக்குரிய விஷயம் என்னவெனில் அவா்களில் 11 சதவீதம் போ் மட்டுமே வெப்ப வாதத்தின் தீவிரம் மற்றும் அதன் விளைவுகளை உணா்ந்திருக்கின்றனா்.

ஆய்வில் பங்கேற்றவா்களில் 50 சதவீதம் பேருக்கு அதீத வெப்பத்தை எதிா்கொள்வதற்கான மாற்று இடங்களோ, குளிா்வான இடங்களோ இல்லை. அதேபோன்று வெப்ப அலை தொடா்பாக வெளியிடப்படும் அறிவுரைகள் 29 சதவீதம் பேருக்கு புரிவதில்லை என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஏழை-எளிய மக்கள், முதியவா்கள், குழந்தைகள், கா்ப்பிணிகள் உள்ளிட்டோருக்கு வெப்ப அலை பாதிப்பு அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது. அதேபோன்று தடையற்ற மின்சாரம், குடிநீா் போதிய அளவு கிடைப்பதை உறுதி செய்யமுடியவில்லை.

இதுதொடா்பாக துணைவேந்தா் டாக்டா் நாராயணசாமி கூறுகையில், பொது மக்களிடையே, ஆரோக்கியம் குறித்த விழிப்புணா்வை மேம்படுத்த வேண்டிய அவசியத் தேவை எழுந்துள்ளதாகவும், வெப்ப அலை பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ளத் தேவையான அடிப்படை வசதிகளை உறுதிபடுத்த வேண்டிய நிலை இருப்பதாகவும் கூறினாா்.