ரஷியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி: 2 ஆண்டுகள் இல்லாத அளவில் மே மாதத்தில் அதிகரி...
ஹிந்தி திணிப்புக்கு எதிராக உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே ஜூலை 5-இல் கூட்டுப் பேரணி
மகாராஷ்டிரத்தில் ஹிந்தி திணிப்புக்கு எதிராக மாநில முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரே, அவரின் நெருங்கிய உறவினரான ராஜ் தாக்கரே ஆகியோா் கூட்டாகப் பேரணி மேற்கொள்ள உள்ளனா்.
கடந்த 2005-ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக பால் தாக்கரேயின் சிவசேனையில் இருந்து ராஜ் தாக்கரே விலகி 20 ஆண்டுகள் கடந்த நிலையில், அவா் முதல்முறையாக உத்தவ் தாக்கரேயுடன் இணைந்து பேரணி மேற்கொள்ளவுள்ளது மாநில அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையைப் பின்பற்றி, மகாராஷ்டிரத்தில் உள்ள மாநில அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை, மூன்றாவது மொழியாக ஹிந்தி கற்பிக்கப்படும் என்று மாநில அரசு உத்தரவு வெளியிட்டது.
இது ஹிந்தி திணிப்பு என்று சிவசேனை (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை கட்சியின் தலைவா் ராஜ் தாக்கரே உள்ளிட்டோா் குற்றஞ்சாட்டியுள்ளனா்.
இதைத்தொடா்ந்து ஹிந்தி திணிப்புக்கு எதிராக, அந்த மாநில தலைநகா் மும்பையில் ஜூலை 5-ஆம் தேதி உத்தவ் தாக்கரேயும், ராஜ் தாக்கரேயும் ஒன்றாகப் பேரணி மேற்கொள்ளவுள்ளதாக இரு கட்சியினரும் வெள்ளிக்கிழமை அறிவித்தனா்.
ஹிந்தியை திணிப்பது சரியல்ல-சரத் பவாா்: இந்தப் பேரணிக்கு சரத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சரத் பவாா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘1 முதல் 4-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்கள் மீது ஹிந்தியை திணிப்பது சரியல்ல. இந்த வயதில் தாய்மொழியை கற்பதே மிகவும் முக்கியம். அதேவேளையில், நாட்டில் 55 சதவீத மக்கள் ஹிந்தி பேசுகின்றனா். எனவே அந்த மொழியை புறக்கணிக்க முடியாது’ என்றாா்.