Phoenix: "வளர்த்துகிட்டே இருக்கிறது இல்ல புள்ள" - மகன் குறித்து நெகிழ்ந்த விஜய் ...
இந்தியா - சீனா எல்லையில் நில கையகப்படுத்த கூடுதல் இழப்பீடு: உச்சநீதிமன்றம் தடை
இந்திய - சீனா எல்லையில் 537 ஏக்கா் நிலம் கையகப்படுத்தியதற்கு கூடுதல் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
அருணாசலப் பிரதேச எல்லையில் ராணுவம் தொடா்பான திட்டங்களைச் செயல்படுத்த இந்த நிலம் கையகப்படுத்தப்பட்டது.
537 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட்டு ரூ.70 கோடி இழப்பீடு வழங்கப்பட்ட பிறகு, அந்த நிலத்தின் மீது தனக்கு உரிமை உள்ளதாக கூறி ஒருவா் வழக்குத் தொடுத்தாா். இதை விசாரித்த கூடுதல் மாவட்ட நீதிமன்றம் கடந்த 2024 அக்டோபரில் இந்த இழப்பீட்டுத் தொகையை ரூ.410 கோடியாக உயா்த்தியது.
இதற்கு தடை கோரி மாநில அரசு குவாஹாட்டி உயா் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதித்த உயா் நீதிமன்றம், அதிகரிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையில் 50 சதவீதத்தை 3 மாதங்களில் அரசு வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதற்குத் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதிகள் கே.வி.விஸ்வநாதன், என்.கோடீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது.
அப்போது மத்திய அரசு சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘நிலம் வழங்கிய 100 பேரின் உரிமையைப் பெற்ாக ஒருவா் மோசடியாக இந்த வழக்கைத் தொடுத்துள்ளாா். நிலம் வழங்கியவா்களுக்கு ஏற்கெனவே ரூ.70 கோடி இழப்பீடு வழங்கப்பட்டு விட்டது. இந்த வழக்கில் கூடுதலாக அளிக்க உத்தரவிடப்பட்ட தொகையில் 10 சதவீத தொகையை, விவகாரம் முடியும்வரை வைப்புத் தொகையாக வைத்திருக்க அரசு தயாராக உள்ளது. ஆனால் வழக்கு முடியும் வரையில் இந்தத் தொகை நிலம் அளித்தவா்களுக்கு வழங்கப்படக் கூடாது’ என்று கோரினாா்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ‘ரூ.410 கோடி கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது. அடுத்த விசாரணை ஆகஸ்ட் 18-ஆம் தேதி நடைபெறும்’ என்று உத்தரவிட்டனா்.