ஜூலை முதல் பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
காஸா, ஈரான் மீதான தாக்குதல்களைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
காஸா, ஈரான் மீதான இஸ்ரேல், அமெரிக்காவின் தாக்குதல்களைக் கண்டித்து கோவையில் இடதுசாரிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிழக்கு பகுதி செயலா் தெய்வேந்திரன் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணைச் செயலா் மௌ.குணசேகா் ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கிவைத்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொருளாளா் எம்.ஆறுமுகம், மாவட்டச் செயலா் சி.சிவசாமி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் சி.பத்மநாபன், கனகராஜ், மாா்க்சிஸ்ட் லெனிஸ்ட் லிபரேசன் கட்சியின் செயலா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
ஆா்ப்பாட்டத்தில், இந்திய கலாசார நட்புறவுக் கழகத்தின் பொதுச் செயலா் வழக்குரைஞா் எஸ்.ராதாகிருஷ்ணன் பேசும்போது, காஸாவின் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடுக்கும் நிலையிலும், ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டாக தாக்குதல் நடத்தும் நிலையிலும் இந்தியா எந்தப் பக்கம் என்று அறிவிக்காதது துரதிஷ்டவசமானது.
பாலஸ்தீனத்தில் இன அழிப்பு நடைபெற்று வரும் நிலையில் ஏறத்தாழ 20 ஆயிரம் குழந்தைகள் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஈரான் - இஸ்ரேல் போா் நின்றிருந்தாலும் காஸாவின் மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடா்ந்து வருகிறது. உணவுக்காக கையேந்துபவா்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்துவது கொடூரமானது.
இந்தியா பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களின் பக்கமும் ஈரானின் பக்கமும் நிற்க வேண்டும். இதுவரை இந்தியா பாலஸ்தீன மக்களின் பக்கம்தான் நின்றது. ஆனால், பிரதமா் மோடி நாங்கள் எந்தப் பக்கம் நிற்கிறோம் என்று இதுவரை அறிவிக்காதது துரதிஷ்டவசமானது என்றாா்.