கட்சிரோலி, கோண்டியாவில் 4 தாலுகாக்கள் நக்சல் பாதிப்புக்குள்ளானவை: மகாராஷ்டிர அரச...
கொல்கத்தா: "காலில் விழுந்து கெஞ்சியும் விடவில்லை" - பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கல்லூரி மாணவி
கொல்கத்தாவில் கடந்த புதன் கிழமை இரவு தெற்கு கொல்கத்தா சட்டக்கல்லூரியில் படிக்கும் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
இச்சம்பவம் கொல்கத்தாவில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மனோஜித் மிஸ்ரா, அகமத், பிரமித் முகோபாத்யா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் மனோஜித் மிஸ்ரா இதே கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர் ஆவார். அவர் படித்து விட்டு செசன்ஸ் கோர்ட்டில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். இக்குற்றம் தொடர்பாக 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாலியல் வன்கொடுமை தொடர்பாகப் பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்துள்ள புகார் இப்போது வெளியாகி இருக்கிறது. அதில், 'நான் தேர்வு தொடர்பாகச் சில வேலைகள் இருந்ததால் மாலை நேரத்தில் கல்லூரிக்குச் சென்று அங்குள்ள மாணவர் யூனியன் அறையில் அமர்ந்திருந்தேன். அங்கு வந்த மனோஜித் மிஸ்ரா என்னிடம் ரொமான்ட்டிக்காக நடந்து கொள்ள முயன்றார்.

நான் அதனைத் தட்டிக்கழித்தேன். அந்நேரம் என்னையும், மனோஜித்தையும் அறையில் வைத்து இரண்டு பேர் பூட்டினர். மனோஜித் என்னைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார். நான் எதிர்த்து போராடினேன்.
அழுதுகொண்டே என்னைப் போக அனுமதிக்கும்படி கெஞ்சினேன். அவரது காலைத் தொட்டு கும்பிட்டு என்னை விட்டுவிடும்படி கூறினேன். ஆனால் அவர் விடவில்லை. என்னைப் பாலியல் வன்கொடுமை செய்யும் நோக்கில் தொடர்ந்து என்னை அணுகிக்கொண்டிருந்தார்.
நான் அவரைப் பிடித்து தள்ளிவிட்டேன். எனக்கு காதலன் இருப்பதாகவும், அவனை மிகவும் காதலிப்பதாகவும் தெரிவித்தேன். அவர் என்னைத் தலையில் தாக்கியதால் எனக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது. உடனே வெளியில் நின்ற இரண்டு பேரை மனோஜித் உள்ளே அழைத்தார். அவர்களிடம் உதவி கேட்டேன். அவர்கள் உதவ மறுத்துவிட்டனர்.
இதனால் எனக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பதாகக் கூறி இன்ஹெலர்(inhaler) வாங்கி வரும்படி கேட்டுக்கொண்டேன். அதில் ஒருவர் சென்று வாங்கி வந்து கொடுத்தார். அதன் பிறகுதான் மூச்சுவிடுவதில் சிரமம் குறைந்தது. உடனே அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றேன். ஆனால் அவர்கள் என்னைப் பிடித்து அடித்து உதைத்தனர். கல்லூரி மெயின் கதவை ஏற்கனவே மூடி இருந்தனர்.
இதனால் செக்யூரிட்டி கார்டால் எதுவும் செய்ய முடியவில்லை. அவர்கள் என்னை செக்யூரிட்டி கார்டு அறைக்குள் தூக்கிச்சென்றனர். அங்கிருந்த செக்யூரிட்டி கார்டை அடித்து விரட்டினர். அங்கு என்னை மனோஜித் ஆடைகளைக் கழற்றி பாலியல் வன்கொடுமை செய்ய ஆரம்பித்தான்.
நான் எதிர்த்து போராடியபோது என்னை மிரட்ட ஆரம்பித்தான். எனது காதலனையும், எனது பெற்றோரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டிக்கொண்டே என்னைப் பாலியல் வன்கொடுமை செய்தான்.
இரண்டு பேர் இதனைப் பார்த்துக்கொண்டிருந்தனர். எதிர்ப்பு தெரிவித்த என்னை ஹாக்கி மட்டையால் தலையில் அடித்தனர். இரவு 10 மணி வரை என்னைப் பாலியல் வன்கொடுமை செய்தனர். நடந்த நிகழ்வுகளை வீடியோவும் எடுத்துக்கொண்டனர்.
என்னை இரவு 10.50 மணிக்குத்தான் விடுவித்தனர். இது குறித்து வெளியில் சொன்னால் வீடியோவை இண்டர்நெட்டில் வெளியிட்டுவிடுவோம் என்று மிரட்டி என்னை அனுப்பி வைத்தனர். ஆனால் நான் மனதைத் திடப்படுத்திக்கொண்டு புகார் செய்தேன். சட்டக்கல்லூரி மாணவியான எனக்கு நீதிவேண்டும்'' என்று அம்மாணவி தெரிவித்துள்ளார்.
மூன்று பேரின் மொபைல் போனும் பறிமுதல் செய்யப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டு இருக்கின்றன என்று போலீஸார் தெரிவித்தனர். குற்றவாளி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவருக்குத் தக்க தண்டனை கிடைக்கவேண்டும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

மனோஜித் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுடன் இருக்கும் புகைப்படங்களை பா.ஜ.கவினர் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வந்தனர். அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் இச்சம்பவம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குப் பெரிய பின்னடைவாக அமைந்திருக்கிறது.
மூன்று நாட்களுக்குள் இச்சம்பவம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி தேசிய பெண்கள் கமிஷன் மாநில போலீஸைக் கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த ஆண்டு ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இப்போது மீண்டும் கல்லூரி வளாகத்திற்குள் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருப்பது திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.
முக்கிய குற்றவாளி சம்பவம் நடந்த கல்லூரியில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றி வருவதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதோடு மனோஜித் தனது தந்தையிடம் சண்டையிட்டுக்கொண்டு 5 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து வந்து தனியாக வாழ்வதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.