தேனி: திமுக கவுன்சிலர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு; பின்னணி என்ன?
தேனி மாவட்டம், அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் ராமசாமி.
திமுக-வைச் சேர்ந்த தேனி வடக்கு நகர பொறுப்பாளரும், தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்றத் தலைவர் ரேணுபிரியாவின் கணவரும், அல்லிநகரம் நகராட்சி 20வது வார்டு நகர் மன்ற உறுப்பினருமான பாலமுருகன் என்பவர் தன்னை சாதிப் பெயரைச் சொல்லி திட்டி, அடிக்க முற்பட்டு, கொலை மிரட்டல் விடுத்தார் என்றும், அவரை எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் ராமசாமி தேனி நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
அந்த புகாரில், "ஜூன் 24ம் தேதி நகராட்சி ஆணையாளருடன் வரி வசூல் பணியில் இருந்தபோது பாலமுருகன் தனக்கு கைபேசி மூலம் தொடர்பு கொண்டு பாரஸ்ட் ரோட்டில் உள்ள திமுக கட்சி அலுவலகத்திற்கு உடனே வரும்படி அழைத்தார்.
அங்கு சென்றபோது, 'பழைய பேருந்து நிலையத்தில் இருக்கிற இரண்டு சக்கர வாகனம் நிறுத்தும் இடத்தை எடுக்கச் சொல்லி தீர்மானம் போட்டு 6 மாசம் ஆகிறது ஏன் இன்னும் எடுக்கவில்லை' எனக் கேட்டார்.

இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பி உள்ளோம் இன்னும் அவர்கள் எடுக்கவில்லை என்று சொன்னதற்கு பாலமுருகன்வ் 'நீயும் நகராட்சி ஆணையாளரும் நான் சொல்வதைக் கேட்க மாட்டீர்களா?' என ஒருமையில் சாதிப் பெயரைச் சொல்லி அருவருப்பான வார்த்தைகளால் திட்டி பேசி கொலை மிரட்டல் விடுத்தார்" என்று புகாரில் தெரிவித்திருந்தார்.
இந்த புகாரின் பேரில் தேனி நகர் காவல்துறையினர் திமுக நகராட்சி கவுன்சிலர் பாலமுருகன் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.