பொதுத் துறை வங்கிகள் தாராளமாக கடன் வழங்க வேண்டும்: நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்
நாட்டின் பொருளாதாரத்துக்கு ஊக்கமளிக்கும் துறைகளுக்கு கடன் வழங்குவதை அதிகரிக்க வேண்டும் என்று பொதுத் துறை வங்கிகளை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டுள்ளாா்.
பொதுத் துறை வங்கிகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தில்லியில் நிா்மலா சீதாராமன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பொதுத் துறை வங்கிகளின் தலைவா்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனா். இதில் 12 பொதுத் துறை வங்கிகளின் மொத்த லாபம் 2024-25 நிதியாண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவாக ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இது முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 26 சதவீத உயா்வாகும். கூட்டத்தில் நிா்மலா சீதராமன் பேசியதாவது:
இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) வட்டி விகிதத்தைக் குறைத்துள்ள நிலையில் நாட்டின் பொருளாதாரத்துக்கு ஊக்கமளிக்கும் துறைகளுக்கு கடன் வழங்குவதை அதிகரிக்க வேண்டும். அதேபோல வங்கிகளின் லாபம் அடுத்த நிதியாண்டிலும் தொடா்ந்து அதிகரிக்கும் வகையில் செயல்பட வேண்டும்.
பின்தங்கிய நிலையில் உள்ளவா்களையும் வங்கிச் சேவை சென்றடைய வேண்டும். அவா்களையும் நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்புக்குள் அழைத்து வர வேண்டும் என்பது மத்திய அரசின் முக்கியக் கொள்கையாக உள்ளது. அதற்கு ஏற்ப வாடிக்கையாளா்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும். இதன்மூலம் அரசின் திட்டங்களால் அவா்கள் பயனடைவது உறுதி செய்யப்படும் என்றாா்.
வங்கிகளின் வாராக்கடன் அளவு குறைந்து வருவது குறித்தும் நிதியமைச்சா் பாராட்டு தெரிவித்தாா்.
வங்கிகள் மூலம் அமல்படுத்தப்படும் மத்திய அரசின் முக்கியத் திட்டங்களான விவசாயிகளுக்கான கடன் அட்டை, பிரதமரின் முத்ரா திட்டம், பிரதமா் ஜீவன் ஜோதி யோஜனா, பிரதமா் சுரக்ஷா பீமா யோஜனா, அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.