``போர் நடவடிக்கை, மக்களின் உரிமை அபகரிப்பு..'' - சிந்து நீர் ஒப்பந்த நிறுத்தம் ப...
அக்னி நட்சத்திரம் எப்போது?
தமிழ் நாள்காட்டியில் குறிப்பிடப்படும் கத்தரி வெய்யில் என்கிற அக்னி நட்சத்திரம் இந்தாண்டு எப்போது தொடங்குகிறது என்பதைத் தெரிந்துகொள்வோம்.
ஒவ்வொரு ஆண்டும் வெய்யில் மாதங்களான மார்ச் முதல் ஜூன் வரை கோடை வெப்பம் கொளுத்தி எடுக்கும். அதிலும் கத்திரி வெய்யில் என்னும் அக்னி நட்சத்திரம் நெருப்பை அள்ளி தலையில் கொட்டுவது போன்று வெய்யில் பிளந்து எடுக்கும்.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் பிப்ரவரி முதலே வெய்யில் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், திருத்தணி ஆகிய மாவட்டங்களில் வழக்கத்தை விட இந்தாண்டு அதிகளவில் வெப்பம் பதிவாகியுள்ளது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே ஒருசில இடங்களில் வெய்யில் 100 டிகிரியை தாண்டியுள்ளது. வழக்கத்தை விட இந்தாண்டு கூடுதலாக வெப்பநிலை அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் நம்மைக் குளிர்விக்கக் கோடை மழையும் அவ்வப்போது தலைகாட்டிச் சென்றாலும், அடுத்த நாளே வழக்கம்போல் வெய்யில் கொளுத்தத் தொடங்குகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்னரே தமிழகத்தில் பல இடங்களில் 2 முதல் 4 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும் என வாினிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்தாண்டின் கத்தரி வெய்யில் எனும் அக்னி நட்சத்திரம் மே 4 முதல் மே 28 வரை நீடிக்க உள்ளது. இந்த காலகட்டத்தில் வழக்கத்தை விட வெய்யில் மிகவும் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆங்கில நாள்களின்படி கிட்டத்தட்ட மே மாதம் முழுவதுமே இந்தாண்டு கத்தரி வெய்யில் கொளுத்தப்போகிறது.
கோடை வெப்பத்திலிருந்து மக்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள அதிகப்படியான தண்ணீர் அருந்துவதும், உடல் அதிக சூடு ஆகாமலும் பார்த்துக்கொள்ளவும். இளநீர், மோர், பழச்சாறு போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். வெளியில் செல்லும்போது மறக்காமல் குடை எடுத்துச்செல்லுங்கள்.
முக்கியமாக அக்னி நட்சத்திரம் முடியும் வரை வெயிலின் உக்கிரம் அதிகமாக இருக்கும் என்பதால், மக்கள் தேவையின்றி வெளியில் வருவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.