’அடகு நகையை மீட்டு விற்றால் கூடுதல் பணம் கிடைக்கும்’ - ரூ.20 லட்சம் பணத்தை சுருட்டிய நால்வர்
தென்காசி மாவட்டம், வடகரை பகுதியைச் சேர்ந்தவர் ஜிந்தாமதார். நகைக்கடை நடத்தி வருகிறார். இவர், இலத்தூர் காவல் நிலையத்தில், தன்னை ஒரு நபர் தொடர்பு கொண்டு நகை வாங்கித் தருவது போல் நடித்து தன்னுடைய பணம் ரூ. 20. லட்சத்தை கொள்ளையடித்து சென்று விட்டதாக புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீஸார் குற்றம் சாட்டப்பட்ட குறிப்பிட்ட அந்த நபரின் செல்போன் எண்களை வைத்து அவரது இருப்பிடத்தை ஆய்வு செய்தனர். அப்போது, அந்த நபர் கேரளா நோக்கி சென்று கொண்டிருப்பது தெரியவந்தது.

அவரை பின் தொடர்ந்து சென்ற போலீஸார், கேரளா போலீஸாரின் உதவியுடன் பணத்தை கொள்ளை அடித்துச் சென்ற நபர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களை இலத்தூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், தென்காசி மாவட்டம், தாருகாபுரம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர்கள் என தெரிய வந்தது.
அவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையின் போது, ஜிந்தாமதார் இடைகால் பகுதியில் நகை கடை நடத்தி வரும் நிலையில், அவரை அணுகிய கிருஷ்ணன் தனது நண்பரின் நகைகள், வாசுதேவநல்லூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் அடமானத்தில் உள்ளதாகவும், அந்த நகையை திருப்ப ரூ.20 லட்சம் தேவைப்படுவதாகவும், அதை வாங்கி நீங்கள் விற்பனை செய்தால் லட்சக்கணக்கில் லாபம் பார்க்கலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதனை பண ஆசையில் நம்பிய ஜிந்தா மதார் ரூ.20 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு கிருஷ்ணன் உடன் காரில் சென்றுள்ளார்.

அப்போது காரில் வைத்து சிந்தா மதாரிடம் இருந்து ரூ.20 லட்சத்தை கிருஷ்ணன் வாங்கி உள்ளார். இந்த நிலையில், வாசுதேவநல்லூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி முன்பு ஜிந்தா மதாரை நிற்க சொல்லிவிட்டு, ” சற்று நேரத்தில் வருகிறேன் நீங்கள் வங்கியிலேயே காத்திருங்கள்” என்று கூறிச் சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் கிருஷ்ணன் வராததால், அச்சமடைந்த ஜிந்தா மாதர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து இலத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததும் தெரியவந்தது.
இலத்தூர் காவல் நிலைய போலீஸாரிடம் பேசினோம், “தற்போது கைது செய்யப்பட்ட கிருஷ்ணன் மீது இது போன்ற பல்வேறு புகார்கள் உள்ளது. குறிப்பாக, சிறு வயதான கிருஷ்ணன் சமீபத்தில் தென்காசி மாவட்டம் முழுவதும் வட்டி இல்லா கடன் தருவதாக கூறி ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டி ஒரு மாநாடு போல நடத்தி 25க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வட்டி இல்லா கடன் வழங்கி பொது மக்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். மேலும் இவர், சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமாருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்வதாக 50 இளைஞர்களை அழைத்து சென்று தென்காசி தொகுதி முழுவதும் தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.

இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகள் இவர் மீது உள்ள நிலையில், தற்போது நகை கடைக்காரர் ஒருவரை ஏமாற்றி ரூ.20 லட்சம் பணத்தை பறித்து சென்ற வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது போல ஆசை வார்த்தை கூறும் நபர்களை நம்ப வேண்டாம். இது போன்ற நபர்கள் குறித்து உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கலாம்” என்றனர்.