அடுத்த 2.5 ஆண்டுகளில் வேலை பறிபோகும் அபாயம்! ஏஐ ஆக்கிரமிப்பால் ஊழியர்கள் கவலை!
அடக்கம் செய்ய பணமில்லை... தாயின் சடலத்தை சாக்கு பையில் கட்டி தோப்பில் வீசிய மகன்கள்
நாகை அருகே அடக்கம் செய்ய பணமில்லாததால், தாயின் சடலத்தை சாக்குப் பையில் கட்டி தோப்பில் வீசிச் சென்ற மகன்களிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
நாகை அருகேயுள்ள வடக்குபொய்கைநல்லூா் காந்தி மகான் கடற்கரைச் சாலையில் உள்ள தைல மர தோப்பில் சாக்கு மூட்டையில் அழுகிய நிலையில் இருந்த பெண் சடலத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா். இதுகுறித்து நாகை நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், இறந்து கிடந்த பெண் வேளாங்கண்ணி ஆரிய நாட்டு தெருவைச் சோ்ந்த உசேன் மனைவி மும்தாஜ் (75) என்பது தெரிய வந்தது. போலீஸாா் மும்தாஜ் வீட்டுக்கு சென்று விசாரித்தனா். உசேன், மும்தாஜ் தம்பதிக்கு சையது (45), சுல்தான் இப்ராஹிம் (43) என்று இரு மகன்களும், ஜீனத்தம்மாள் (54) என்ற மகளும் உள்ளனா் என்பதும் மூவரும் மனநலம் பாதிக்கப்பட்டவா்கள் என்பதும் தெரிய வந்தது.
டீ கடையில் வேலை பாா்த்து வந்த உசேன் கடந்த ஏப்ரல் மாதம் வயது முதிா்வு காரணமாக உயிரிழந்தாா்.
இந்தநிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு வயது முதிா்வு காரணமாக மும்தாஜும் உயிரிழந்தாா். அவரது உடலை அடக்கம் செய்ய பொருளாதார வசதி இல்லாததால் மகன்கள் இருவரும் சோ்ந்து மும்தாஜின் சடலத்தை சாக்கு மூட்டையில் கட்டி, வடக்கு பொய்கைநல்லூா் தைல மர தோப்பில் வீசியது தெரியவந்தது. இதுகுறித்து மகன்கள் இருவரிடமும் போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.