கார் பந்தயத்தில் மீண்டும் விபத்து: நடிகர் அஜித் உயிர் தப்பினார்!
அணியில் பிரதான பந்துவீச்சாளர்கள் இல்லை, ஆனால்... ஸ்டீவ் ஸ்மித் கூறுவதென்ன?
ஆஸ்திரேலிய அணியின் பிரதான வேகப் பந்துவீச்சாளர்கள் இல்லாமல் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடவுள்ளது குறித்து அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேசியுள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அண்மையில் தொடங்கியது. இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய அணி அதன் பிரதான பந்துவீச்சாளர்கள் இல்லாமல் களமிறங்குகிறது. ஆஸ்திரேலிய அணியில் பிரதான பந்துவீச்சாளர்களான பாட் கம்மின்ஸ், ஜோஸ் ஹேசில்வுட் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் காயம் காரணமாக இடம்பெறவில்லை.
காயம் காரணமாக மிட்செல் மார்ஷும் சாம்பியன்ஸ் டிராபிக்கான ஆஸ்திரேலிய அணியிலிருந்து விலகினார். மார்கஸ் ஸ்டாய்னிஸின் திடீர் ஓய்வு முடிவும் ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாக அமைந்தது.
இதையும் படிக்க: பாகிஸ்தானில் போட்டியை வென்று கொடுக்கும் வீரர்கள் இல்லை: பாக். முன்னாள் வீரர்
இளம் வீரர்களுக்கான வாய்ப்பு
அணியில் பிரதான வீரர்கள் பலரும் இல்லாத நிலையில், அணியில் மூத்த வீரர்கள் பலரும் இல்லாதது ஐசிசி தொடரில் இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட அவர்களுக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய வாய்ப்பு என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: மற்ற ஐசிசி தொடர்களைக் காட்டிலும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டது கிடையாது. ஆனால், அழுத்தமான சூழலில் விளையாடிய பல தருணங்களில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதல் போட்டியிலிருந்தே மிகவும் கவனமாக விளையாட வேண்டும்.
கடந்த 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரின்போது, ஆரம்ப போட்டிகளில் சரியாக செயல்படாமல் பின்னர் பிற்பகுதியில் விளையாடிய போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வென்றோம். ஆனால், சாம்பியன்ஸ் டிராபியில் அவ்வாறு மெதுவாக செயல்பட முடியாது. முதல் போட்டியே காலிறுதிப் போட்டி போன்றது.
இதையும் படிக்க: இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கான அழுத்தத்தில் இருக்கிறோமா? பாக். வீரர் பதில்!
சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் அழுத்தம் என்பது எப்போதும் இருக்கும். எங்களது அனுபவம் வாய்ந்த வேகப் பந்துவீச்சாளர்கள் அணியில் இல்லை. ஆனால், அது குறித்து நாங்கள் அதிகம் கவலைப்படவில்லை. சாம்பியன்ஸ் டிராபி தொடர் இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட அவர்களுக்கு கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு. ஐசிசியின் முக்கியமான தொடர்களில் ஒன்றான சாம்பியன்ஸ் டிராபியில் இளம் வீரர்கள் தங்களது திறமைகளை இந்த உலகுக்குக் காட்ட அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார்.
லாகூரில் நாளை (பிப்ரவரி 22) நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.