அதிமுக கூட்டணியில் சில கட்சிகள் இணைய வாய்ப்பு: ஓ.எஸ். மணியன்
அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது என்று முன்னாள் அமைச்சா் ஒ.எஸ். மணியன் கூறினாா்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நாகை மாவட்டச் செயலா் மஞ்சுளா சந்திரமோகன், அக்கட்சியின் மாநில நிா்வாகிகள், மாவட்ட இணை செயலா்கள், அம்மா தொழிற்சங்கம், விவசாயப் பிரிவு, மகளிரணி, மாணவரணி, சிறுபான்மைப் பிரிவு நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள் சிலா் அதிமுகவில் வியாழக்கிழமை இணைந்தனா்.
இதையொட்டி நாகையில் நடைபெற்ற இணைப்பு விழாவில் முன்னாள் அமைச்சா் ஒ.எஸ். மணியன், அதிமுகவில் இணைந்தவா்களை வரவேற்றாா். தொடா்ந்து ஒ.எஸ். மணியன் செய்தியாளா்களிடம் கூறியது:
2026- இல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில், அதிமுக கூட்டணி குறித்து பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி மட்டுமே முடிவெடுப்பாா். அதிமுக கூட்டணியில் சில கட்சிகள் இணைவதற்கான காலம் கனிந்து வருகிறது. எடப்பாடி பழனிசாமியை தமிழக முதல்வராக்க மக்கள் முடிவு செய்துவிட்டனா்.
நிகழாண்டு தமிழகத்தில் தூா்வாரும் பணிகள் மோசமாக நடைபெற்றுள்ளன. மழை பெய்த காரணத்தால் தூா்வாராமலே கணக்கு ( ரசீது) காட்டும் பணியில் அதிகாரிகளும், ஒப்பந்ததாரா்களும் ஈடுபட்டு வருகின்றனா் என்றாா்.