அரசியலைக் கடந்து திருப்பணிகள் செய்கிறோம்! -முதல்வர் மு.க.ஸ்டாலின்
அபிஷேக் சர்மாவுக்கு ஜோஸ் பட்லர் பாராட்டு!
இந்திய அணியின் இளம் வீரர் அபிஷேக் சர்மாவை இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பாராட்டியுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (பிப்ரவரி 2) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்தை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் நிறைவு செய்தது.
இதையும் படிக்க: பிசிசிஐ விருதுகள்: யார் யாருக்கு என்னென்ன விருதுகள்? முழு விவரம்!
நேற்றையப் போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா 37 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். அவர் 54 பந்துகளில் 135 ரன்கள் (7 பவுண்டரிகள், 13 சிக்ஸர்கள்) எடுத்தார். இதன் மூலம், டி20 போட்டி ஒன்றில் அதிகபட்ச ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
ஜோஸ் பட்லர் பாராட்டு
அபிஷேக் சர்மா பந்துகளை எந்த ஒரு தவறுமின்றி தெளிவாக அடித்து விளையாடியதாக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் அவரை பாராட்டியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: இந்த தோல்வி மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. இந்திய அணி மிகவும் சிறப்பாக விளையாடியது. இந்திய அணியின் வெற்றிக்கு அபிஷேக் சர்மாவைதான் பாராட்ட வேண்டும் என நினைக்கிறேன். அவர் எதிர்கொண்ட அனைத்துப் பந்துகளையும் எந்த ஒரு பிழையுமின்றி நேர்த்தியாக அடித்து விளையாடினார். கடந்த ஐபிஎல் தொடரில் டிராவிஸ் ஹெட்டுடன் இணைந்து அபாரமாக விளையாடிய விதத்தை இந்திய அணியிலும் அபிஷேக் சர்மா எடுத்து வந்துள்ளார். அபிஷேக் சர்மா மிகவும் அற்புதமாக விளையாடினார் என்றார்.