வெள்ளக்கோவிலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: வெளிமாநில தொழிலாளி கைது
வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க இணையதளம்: ஆம் ஆத்மி
வாக்குப் பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க ஆம் ஆத்மி சார்பில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடிகள் செய்து 10 சதவீதம் வரையிலான வாக்கு வித்தியாசத்தை பாஜக ஏற்படுத்த சாத்தியமுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், இதனைத் தவிர்க்கும் வகையில் ஆம் ஆத்மி புதிய இணையதளத்தை உருவாக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
தில்லியில் பிப்ரவரி 5ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த பிரசாரம் இன்று (பிப். 3) மாலையுடன் நிறைவு பெற்றது.
இந்நிலையில், தனது எக்ஸ் தளப் பக்கத்தில் விடியோ வெளியிட்டுள்ள அரவிந்த் கேஜரிவால் வாக்குப் பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
விடியோவில் அவர் பேசியதாவது,
’’வாக்குப் இயந்திரங்கள் மூலம் 10% வாக்கு வித்தியாசத்தை பாஜக ஏற்படுத்தும் என எங்களுக்குக் கிடைத்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
அதாவது ஆம் ஆத்மி கட்சி 15% வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தால், 5% வாக்குகள் முன்னிலை என்று மட்டுமே பதிவாகிறது. அதனால் அனைத்துத் தொகுதிகளிலும் 10 சதவீதத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தைப் பெற ஆம் ஆத்மிக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும். இந்தப் பிரச்னையில் சிக்காமல் இருக்க இதுவே வழி.
மகாராஷ்டிரம், ஹரியாணா மாநிலங்களில் கிடைத்த பாடத்தின் விளைவாக தற்போது தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மற்றும் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதனைச் செய்துள்ளோம்.
வாக்குப் பதிவு நாளான பிப். 5ஆம் தேதி இரவு அனைத்து வாக்குச் சாவடிகள் குறித்தும் 6 முக்கியத் தரவுகளை பதிவேற்றம் செய்ய திட்டமிட்டுள்ளோம்.
இது இயந்திரங்களை தொழில்நுட்ப ரீதியாகத் தாக்காது. யாரையும் ஹேக் செய்ய அனுமதிக்காது. வாக்குப்பதிவு நாளில் பாஜகவினர் ஏதேனும் குளறுபடிகள் செய்தால், இந்த தரவுகளுடன் ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளலாம்’’ எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | தில்லிக்கு பிப். 5-ல் பொது விடுமுறை!