வேலூர் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை: முதல்வர் திறந்துவைத்தார்!
அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் வெற்றி யாருக்கு?
கடந்த 12 நாள்களாக நடைபெற்று வந்த மோதலை முடித்துக்கொள்ள இஸ்ரேலும், ஈரானும் ஒருவழியாக ஒப்புக்கொண்டுள்ளன.
இந்த ஒப்பந்தத்தை மீறுவதாக ஈரான் மீது இஸ்ரேலும், இஸ்ரேல் மீது ஈரானும், இரு நாடுகளையும் சேர்த்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் குற்றஞ்சாட்டிவரும் சூழலில், போர் முடிவுக்கு வருமா, அல்லது நீடிக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
அப்படியே மோதல் முடிவுக்கு வந்து, அமைதி ஏற்பட்டால், அதன் பிறகு இந்தப் போரில் யாருக்கு வெற்றி, யாருக்கு தோல்வி என்று எழுகிற கேள்வியை யாரும் தவிர்க்க முடியாது.
சொல்லப்போனால், இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே கடந்த 13-ஆம் தேதி தொடங்கி, அமெரிக்காவும் கடந்த 22-ஆம் தேதி இணைந்துகொண்ட இந்த மோதலில் தங்களுக்குத்தான் வெற்றி என்று அந்த மூன்று நாடுகளுமே மார்தட்டிவருகின்றன.
ஈரான் அணுசக்தி பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்வு காண வேண்டும் என்று நீண்டகாலமாக வலியுறுத்திவந்த அமெரிக்கா, எதிர்பாராத விதமாக தனது அதிநவீன பி-2 விமானங்கள் மூலம் பிரத்யேக சுரங்கத் தகர்ப்பு குண்டுகள் மூலம் ஈரானின் நிலத்தடி யுரேனியம் செறிவூட்டல் மையம் உள்ளிட்ட பகுதிகளில் தாக்குதல் நடத்தின. அதற்குப் பிறகு, அந்த அணுசக்தி மையங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டதாகவும் இதன் மூலம் உலகில் அமைதியை ஏற்படுத்திவிட்டதாகவும் டிரம்ப் பெருமிதம் பேசினார்.
அந்தத் தாக்குதலுக்குப் பிறகுதான் இஸ்ரேலும் ஈரானும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதால் அது தங்களது தலையீட்டுக்குக் கிடைத்த வெற்றியாக அமெரிக்கா கருதுகிறது.
இஸ்ரேலைப் பொருத்தவரை, ஈரானின் அணு விஞ்ஞானிகளையும் முக்கிய தளபதிகளையும் படுகொலை செய்திருக்கிறது; அணுசக்தி மையங்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியிருக்கிறது; ஏவுகணை ஏவுதளங்கள் உள்ளிட்ட ராணுவ நிலைகளையும் கணிசமாக அழித்திருக்கிறது.
அதே நேரம், ஈரான் சரமாரியாக வீசிய ஏவுகணைகளில் பெரும்பாலானவற்றை இடைமறித்து அழித்துள்ளதுடன், பெரிய அளவில் உயிரிழப்பையும் இஸ்ரேல் தவிர்த்திருக்கிறது.
இதுமட்டுமின்றி, தங்களுக்காக ஈரான் மீது அமெரிக்காவை தாக்குதல் நடத்த வைத்துள்ளது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மிகப் பெரிய வெற்றியாகக் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலில் இது அவருக்குக் கைகொடுக்கக்கூடும்.
இதெல்லாம் ஒரு புறம் இருக்க, இந்தப் போரில் ஈரானும் வெற்றிமுழக்கமிட்டுவருகிறது. அந்த நாட்டைப் பொருத்தவரை தனது விஞ்ஞானிகள், தளபதிகள், ஆயுதங்களை இழந்திருந்தாலும், உலகின் மிகப் பெரிய வல்லரசான அமெரிக்காவையே எதிர்த்து துணிச்சலாக நிற்கும் நாடு என்று தன்னைக் காட்டிக் கொண்டிருக்கிறது.
கத்தாரில் அமெரிக்க ராணுவ நிலை மீதான தாக்குதலை முன்கூட்டியே தெரியப்படுத்தியது போன்ற கவனமான காய் நகர்த்தல்களில் ஈரான் ஈடுபட்டாலும், இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் எதிராக அந்த நாடு விடுத்த அறைகூவல்கள் மூலம் பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவாகவும், யூத ஆக்கிரமிப்புவாதத்துக்கு எதிராகவும் உறுதியாக நிற்கும் ஒரே இஸ்லாமிய நாடாக அது தன்னை முன்னிறுத்தியுள்ளது.
உண்மையில், இந்த மூன்று நாடுகளுக்குமே இந்தப் போரில் வெற்றி கிட்டிவிட்டதாகக் கூறிவிட முடியாது என்கிறார்கள் சர்வதேச பார்வையாளர்கள்.
அமெரிக்கா சொல்வதைப் போல் ஈரானை தலையில் தட்டி உட்காரவைத்துவிட முடியாது. இஸ்ரேல் நினைப்பதைப் போல் ஈரானின் அணுசக்திக் கனவை அழித்துவிட முடியாது. இத்தாக்குதல்களும், அமெரிக்காவின் தலையீடும் ஈரான் தனது அணுசக்தி திட்டங்களை மேலும் தீவிரப்படுத்துவதைத்தான் ஊக்குவிக்கும்.
எனவே, இந்த விவகாரத்தில் தொடர்புடைய நாடுகள் பேசி, அமைதியான முறையில் தீர்வை எட்டும்வரை இதில் யாருக்கும் வெற்றி என்பதே இல்லை என்கிறார்கள் சர்வதேச பார்வையாளர்கள்.