கோடைக்காலத்தில் தடையற்ற சேவையை உறுதி செய்வதற்காக தண்ணீா் ஏடிஎம்களில் என்டிஎம்சி ...
அமெரிக்க பொருள்களுக்கு இந்தியாவில் முழு வரி விலக்கா? -டிரம்ப் அதிர்ச்சி தகவல்!
தோஹா: அமெரிக்க பொருள்களுக்கு இந்தியாவில் முழு வரி விலக்கு அளிக்க இந்தியா சம்மதித்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிர்ச்சி தகவலொன்றை இன்று(மே 15) தெரிவித்திருக்கிறார்.
கத்தார் சென்றுள்ள டிரம்ப் தோஹா நகரில் நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ‘அமெரிக்க பொருள்களுக்கு இந்தியாவில் முழு வரி விலக்கு அளிக்க இந்தியா சம்மதித்திருப்பதாகவும், இதனால் இனிமேல் அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனம் தங்களின் ஐ-போன்களை இந்தியாவில் தயாரிக்க வேண்டிய அவசியமில்லை’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் மீதும் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கைகளை டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து, தொடர்ச்சியாக உலக நாடுகள் விடுத்த கோரிக்கையை ஏற்று, மேற்கண்ட வரி விதிப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் ஜூலை 9-ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாகவும் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி டிரம்ப் அறிவித்தார்.
முன்னதாக, இந்தியாவை வரிக் கழுகு என்று விமர்சித்திருந்த டிரம்ப், அமெரிக்க பொருள்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அதிக வரியை பூஜ்ஜியமாக்க இந்தியா சம்மதித்துள்ளதாக இம்மாத தொடக்கத்தில் குறிப்பிடும்போதும் தெரிவித்திருந்தார், இன்றும் அதே கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இன்று பேசும்போது, இந்தியாவின் நலனை இந்தியாவே கவனித்துக்கொள்ளும் என்றும் சொல்லியிருக்கிறார் டிரம்ப்.
இதனிடையே, எஸ் அண்ட் பி குளோபல் நடத்திய ஆய்வின்படி, கடந்த ஆண்டில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதியாகும் ஐ-போன்கள் எண்ணிக்கை 3.1 மில்லியன் யூனிட்களாக உள்ளன. அதே ஆண்டில், அமெரிக்காவில் ஐ-போன் விற்பனை 75.9 மில்லியன் யூனிட்களாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த ஆண்டு ஜூன் காலாண்டில், அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் ஐ-போன்களில் பெரும்பாலானவை இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐ-போன்களாகவே இருக்கப் போகிறதென ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த மின்னணு சாதன தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் இந்தியாவில் ஐ-போன்களை தயாரித்து வரும் நிலையில், டிரம்ப்பின் கோரிக்கையை ஏற்று இந்தியாவில் ஐ-போன் தயாரிப்பை ஆப்பிள் நிறுத்தினால் அந்நிறுவன ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் வேலை இழக்கும் சூழல் உருவாகும் என்பது கவனிக்கத்தக்கது.