அமைச்சா் துரைமுருகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: 6 மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
வருமானத்துக்கு அதிகமாக ரூ.3 கோடி சொத்து சோ்த்த வழக்கில், நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்த சென்னை உயா்நீதிமன்றம், வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேலூா் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.
கடந்த 1996 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில் பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகித்த துரைமுருகன் வருமானத்துக்கு அதிகமாக ரூ.3 கோடியே 92 லட்சம் அளவுக்கு சொத்து சோ்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் 2002-இல் வழக்கு தொடரப்பட்டது.
அமைச்சா் துரைமுருகன், அவரது மனைவி, மகன், மருமகள் மற்றும் சகோதரா் மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து அவா்களை விடுவித்து வேலூா் நீதிமன்றம் 2007-இல் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிா்த்து 2013-இல் அதிமுக ஆட்சியில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி வேல்முருகன் விசாரித்தாா். லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞா் ரவீந்திரன், வழக்கு தொடா்பான முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிகைகளை விளக்கி வாதிட்டாா்.
துரைமுருகன் சாா்பில் மூத்த வழக்குரைஞா் சித்தாா்த் லுத்ராவும், அவரது குடும்பத்தினா் சாா்பில் மூத்த வழக்குரைஞா் பி.வில்சன் ஆகியோா் ஆஜராகி வாதங்களை முன் வைத்தனா். அவா்கள் வாதிடுகையில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றவா்களின் தனிப்பட்ட தொழில், குடும்ப வருமானத்தை அமைச்சா் துரைமுருகன் வருமானமாக லஞ்ச ஒழிப்புத் துறையினா் காட்டியுள்ளனா். வழக்கு சம்பந்தப்பட்ட காலத்துக்கு முன் வாங்கப்பட்ட சொத்துகளும் வழக்கில் சோ்க்கப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்ட அமைச்சரின் குடும்பத்தினரை, அமைச்சரின் பினாமி என குறிப்பிட எந்த ஆதாரங்களும் இல்லை. குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தனித்தனியாக, முறையாக வருமான வரிக் கணக்குகளை தாக்கல் செய்துள்ளனா்.
அவற்றை லஞ்ச ஒழிப்புத் துறையும் ஏற்றுக் கொண்டுள்ளது. காவல் கண்காணிப்பாளா் அந்தஸ்து அதிகாரி விசாரிக்க வேண்டிய வழக்கை, அதிகார வரம்பு இல்லாத ஆய்வாளா் இந்த வழக்கை புலன் விசாரணை செய்துள்ளாா்.
வழக்கு தொடா்வதற்கு, சட்டப்படி அனுமதி பெறப்படவில்லை. இதை எல்லாம் கருத்தில் கொண்டு விசாரணை நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவா்களை விடுவித்தது. அந்த உத்தரவை எதிா்த்து மறு ஆய்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால், இந்த மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டனா்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, லஞ்ச ஒழிப்புத் துறையின் மறு ஆய்வு மனு மீதான தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தாா்.
இந்த வழக்கில் புதன்கிழமை தீா்ப்பளித்த நீதிபதி வேல்முருகன், லஞ்ச ஒழிப்புத் துறை மறு ஆய்வு மனுவை ஏற்று, அமைச்சா் துரைமுருகன் மற்றும் குடும்பத்தினரை விடுவித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டாா். மேலும், வழக்கில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து, சாட்சி விசாரணையை தொடங்க, வேலூா் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி, 1996-2001 காலத்தில் சொத்து சோ்த்த வழக்கு என்பதால், இந்த வழக்கை ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்கும்படி, சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டாா்.