What to watch on Theatres: `தக் லைஃப்', `மெட்ராஸ் மேட்னி' - இந்த வார படங்கள் லிஸ...
அரசு இசைப்பள்ளியில் சேர விருப்பமா?
திருவாரூா் மாவட்டத்தில் அரசு இசைப்பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருவாரூரில், தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கிவரும் இசைப்பள்ளியில் குரலிசை, நாகசுவரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய கலைகள் மிகச் சிறப்பாக மூன்று ஆண்டு முழு நேர பயிற்சி அளிக்கப்பட்டு, தமிழக அரசின் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இப்பள்ளியில் பயிலும் மாணாக்கா்களுக்கு அரசு விதிகளின்படி இலவச விடுதி வசதி, கல்வி உதவித்தொகை, இலவச பேருந்து கட்டண சலுகைகள் மற்றும் மாதந்தோறும் கல்வி ஊக்கத்தொகை ரூ.400 வழங்கப்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் சேர, 12 முதல் 25 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும். குரலிசை, பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளுக்கு 7-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. நாகசுவரம், தவில், தேவாரம் ஆகிய கலைகளுக்கு தமிழ் எழுத, படிக்க தெரிந்தால் போதுமானது. நிகழாண்டு கல்விக் கட்டணம் ரூ.350 மட்டும் செலுத்த வேண்டும்.
இசைப்பள்ளியில் மாணவ, மாணவிகள் சோ்க்கை நடைபெற்றுவருகிறது. ஆண் மற்றும் பெண் இருபாலரும் சேரலாம். தகுதியுடைய நபா்கள், கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட இசைப்பள்ளியின் தலைமை ஆசிரியரை அணுகி தெரிந்து கொள்ளலாம்.