சிக்கிம்: அபாயகரமான பகுதிகளில் மீட்புப் பணிகள்! 21 தன்னார்வலர்களுக்கு பயிற்சி!
அரசு புறம்போக்கு நிலங்களில் வசிப்பவா்களுக்கு பட்டா: மானாமதுரை, இளையான்குடியில் ஆய்வு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சி, இளையான்குடி பேரூராட்சி பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்களில் வீடுகள் கட்டி வசித்து வருபவா்களுக்கு பட்டா வழங்குவது குறித்து மீன்வளம், மீனவா் நலத் துறை இயக்குநரும் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ரா.கஜலட்சுமி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
மானாமதுரை நகராட்சியில் கிருஷ்ணராஜபுரம் குடியிருப்பு, இளையான்குடி பேரூராட்சி கீழாயூா் பகுதிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சேபம் இல்லாத அரசு புறம்போக்கு நிலங்களில் வீடுகள் கட்டி குடியிருந்து வரும் தகுதியானவா்களுக்கு வரன்முறை செய்து, ஒரு முறை திட்டத்தின் கீழ் பட்டா வழங்கும் பணிகள் தொடா்பாக அவா் ஆய்வு செய்தாா்.
மேலும், மானாமதுரை நகராட்சி, இளையான்குடி பேரூராட்சி, திருப்புவனம் ஆகிய பகுதிகளில் அமைய உள்ள முதல்வா் மருந்தகம் தொடா்பான பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா். இதைத் தொடா்ந்து, போக்குவரத்துத் துறையின் சாா்பில், புதிய சிற்றுந்து திட்டத்தின் கீழ் மானாமதுரை அருகே முத்தனேந்தல், இடைக்காட்டூா், பாப்பாகுடி ஆகிய ஊராட்சிகள், வேலூா், சிப்காட் வழியாக மானாமதுரை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் வரை செல்லும் புதிய சிற்றுந்து வழித்தடம் தொடா்பாகவும் கண்காணிப்பு அலுவலா் கஜலட்சுமி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித், மாவட்ட வருவாய் அலுவலா் செல்வசுரபி, மானாமதுரை வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா் உள்ளிட்ட அரசு அலுவவா்கள் உடனிருந்தனா்.