தமிழகம், கேரளத்தில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வரும்: அமித் ஷா நம்பிக்கை
ஆசிரியரின் பாலியல் தொல்லையால் மாணவி தீக்குளிப்பு! காப்பாற்ற முயன்ற மாணவருக்கும் 70% தீக்காயம்!
ஒடிசாவில் ஆசிரியல் பாலியல் தொல்லையளித்ததாக மாணவி ஒருவர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தின் பாலசோர் நகரில் உள்ள ஃபாகிர் மோகன் கல்லூரியில் ஒரு மாணவிக்கு சமீர்குமார் சாஹு என்ற ஆசிரியர் (HoD) ஒருவர் பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். ஆசிரியரின் தகாத நடவடிக்கை குறித்து கல்லூரி புகார் குழுவிடம் ஜூலை முதல்தேதியில் மாணவி புகார் அளித்துள்ளார்.
தன்னை பாலியல்ரீதியாக தொல்லையளித்ததாகவும், மிரட்டியதாகவும் ஆசிரியர் மீது மாணவி புகாரளித்தார். இருப்பினும், தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை ஆசிரியர் மறுத்துள்ளார்.
ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் உறுதியளித்தாலும், நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து, கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து இன்று கல்லூரிக்குள் மாணவியுடன் சேர்ந்து போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து, திடீரென முதல்வர் அலுவலகத்தின் அருகே தன் மீது பெட்ரோல் ஊற்றி, மாணவி தீக்குளிக்க முயற்சித்தார்.
இந்த நிலையில், தீக்குளித்த மாணவியைக் காப்பாற்ற முயன்ற மாணவர் மீதும் தீப்பற்றியது.
இருவர் மீதும் தீப்பற்றியதையடுத்து, அங்கிருந்தோர் அவர்கள் இருவரையும் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மாணவி 90 சதவிகித தீக்காயங்களுடனும், காப்பாற்ற முயன்ற மாணவர் 70 சதவிகித தீக்காயங்களுடனும் புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, குற்றம் சாட்டப்பட்ட சஹீம்குமார் கைது செய்யப்பட்ட நிலையில், கல்லூரி முதல்வரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், விரிவான விசாரணையையும் காவல்துறையினர் தொடங்கியுள்ளனர்.